ஆப்நகரம்

பெட்ரோல் பங்குகளில் மின்வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்- விரைவில்..!

இந்தியாவில் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்தவகையில் பெட்ரோல் பங்குகளில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 2 Jul 2019, 10:05 am
எரிபொருள் வாகன பயன்பாட்டை குறைத்து, காற்று மாசு ஏற்படுத்தாத மின்சார வாகன பயன்பாட்டை கொண்டு வர மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக நிதி அயோக் அமைப்பும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
Samayam Tamil பெட்ரோல் பங்குகளில் சார்ஜிங் நிலையங்கள்
பெட்ரோல் பங்குகளில் சார்ஜிங் நிலையங்கள்


நிதி அயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் மத்திய அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அறிக்கையில், 2025ம் ஆண்டு முதல் 150 சிசி இழுவைத் திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் மின்சார ஆற்றல் பெற்ற மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யவும், உற்பத்தி செய்யவும் அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

மேலும், 2023ம் ஆண்டு முதல் மின்சார ஆற்றலில் இயங்கும் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே வாங்கவும், உற்பத்தி செய்யவும் அனுமதிக்க வேண்டும். இதே உத்தரவு 2025ம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து பரிசீலித்து வந்த மத்திய அரசு, தற்போது எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாகனப் பதிவு மற்றும் மறுப்பதிவிற்கான கட்டணத் தொகையை தற்போதைய நிலையில் இருந்து 400 மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும், மின்சார வாகன பயன்பாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதில், எரிபொருளை விநியோகிக்கும் நிலையங்களில் மின்வாகன பேட்டரிகளை சார்ஜ் செய்யும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முயற்சித்து வருகிறது.

இந்தியாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் செயல்படுகின்றன. அதே அளவுக்கு மின்வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் நிலையங்களையும் அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் மின்வாகன கட்டமைப்பை உருவாக்காமல் இருப்பதற்கு பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அரசினை குறை கூறி வருகின்றன.

தற்போது மத்திய அரசின் இந்த முயற்சியால், மின்வாகனங்களை தயாரிக்காமல் இருப்பதற்கு நிறுவனங்கள் காரணம் கூற முடியாது. இதனால் மின்வாகனங்களை தயாரிப்பதற்கான மத்திய அரசு உத்தரவை ஏற்று, நிறுவனங்கள் செயலில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி