ஆப்நகரம்

பொதுமக்களுடன் பேருந்தில் ஏறி டிக்கெட் வாங்கி சட்டசபைக்கு வந்த முதலமைச்சர்

மக்களுடன் மக்களாக காத்திருந்து டிக்கெட் எடுத்து, பேருந்தில் பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மாநில முதல்வர் ஒருவர். அவர் யாரென்று பார்க்கலாம்.

Samayam Tamil 10 Nov 2019, 12:33 am
ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்.
Samayam Tamil பேருந்தில் ஏறி சட்டசபைக்கு சென்றடைந்த முதல்வர்
பேருந்தில் ஏறி சட்டசபைக்கு சென்றடைந்த முதல்வர்


மூன்று முறை தனக்கும், தனது கட்சிக்கும் வெற்றியை தேடி தந்த மக்களுக்கு வேண்டி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளார். மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஷ்வரில் மோ பேருந்து சேவையினை முதல்வர் பட்நாயக் தொடங்கி வைத்தார். அதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.

அந்நகரிலுள்ள பெரும்பாலான இடங்களை இணைக்கும் நோக்கில் மொத்தம் 310 மோ பேருந்துகள் புபனேஷ்வர் முழுவதும் இயக்கப்படுகின்றன. நவீன கட்டமைப்புக் கொண்ட இந்த பேருந்தில் பாதுகாப்பு காரணங்களாக சிசிடிவி கேமராக்கள், வைபை உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.

மேலும், மோ பேருந்தில் பயணம் செய்ய விரும்பும் மக்கள் அதற்குரிய ஸ்மார்ட்போன் செயலியை டவுன்லோடு செய்து, அதன்மூலம் பஸ்ஸி செல்வதற்கு டிக்கெட் பெறலாம். இதனால் மோ பேருந்து சேவை புபனேஷ்வர் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

ஒடிசாவின் மோ பேருந்துகள்


அந்நகரில் மொத்தம் 25 வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த பேருந்துகளில், ஒருநாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேருந்து சேவை தொடங்கப்படும் ஓராண்டு நிறைவடையும் நிலையில், புபனேஷ்வர் நகரிலுள்ள குறிப்பிட்ட வழித்தடத்தில் மக்களுடன் மக்களாக காத்திருந்து, டிக்கெட் எடுத்து மோ பேருந்தில் பயணம் செய்து ஆச்சர்யம் அளித்துள்ளார் முதல்வர் பட்நாயக்.

நவம்பர் 6ம் தேதி புபனேஷ்வர் விமானநிலைய சதுக்கத்தில் இருந்து ஜெயதேவ் பவன் வரை முதல்வர் நவீன் பட்நாயக் மோ பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஒடிசா மாநில முதல்வராக இருந்த போதிலும், பேருந்தில் டிக்கெட் எடுத்து தான் முதல்வர் பட்நாயக் பயணித்துள்ளார்.

முதல்வர் பயணம் போது, பல்வேறு பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் மக்கள் செல்வாக்கு மேலும் அவருக்கு கூடியுள்ளதாக ஒடிசா மாநில ஊடகங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

செல்பி மட்டும் அல்லாமல் பலருக்கு அவர் ஆட்டோகிராப்புகளை வழங்கியுள்ளார். முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களும், கையெழுத்து பெற்றவர்களும், அவற்றை தங்கள் இணையதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் மோ பேருந்தில் பயணம் செய்த பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் பட்நாயக். அதன்படி, விரைவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகன பயன்பாட்டை ஒடிசா மாநில முழுவதும் அதிகரிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக புபனேஷ்வர் நகரில் 50 மின்சார பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார். மோ பேருந்துகள் சேவைக்கு பொதுமக்களிடம் எழுந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அரசுகள் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் ஒடிசா மாநிலம் புதியதாக இணைந்துள்ளது.

அடுத்த செய்தி