ஆப்நகரம்

சிறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.15,700 கோடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.15,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Feb 2021, 1:54 pm
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், கோடிக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத்துறையை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மத்திய பட்ஜெட்டில் இத்துறைக்கு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இத்துறையைக் காப்பதற்காக ரூ.15,700 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Samayam Tamil msme


இதுகுறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், “நாட்டின் சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு ஆதரவு தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இத்துறைக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை விட இரு மடங்காகும். இத்துறைக்கான கடனுதவிகள் எவ்விதத் தடைகளும் இல்லாமல் தொடர்ந்து கிடைக்கும். பட்டியலின மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடி மக்கள், பெண்களுக்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பணத் தேவைக்கான மார்ஜின் 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது” என்றார்.

இலவச சிலிண்டர் திட்டம்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து அவசரகாலக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில்முனைவோர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், தனி நபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் போன்றோர் கடன் வாங்கலாம் என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்