ஆப்நகரம்

21 நாட்களில் இந்தியாவுக்கு இவ்வளவு இழப்பா?

ஊரடங்கு தடைக் காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.8 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Apr 2020, 7:20 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தீவிரமாக இருக்கும் நிலையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த 21 நாட்களில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. ஏற்றுமதி வர்த்தகத்துக்கான ஆர்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வேளாண் தொழிலும் இல்லை; ஆட்டோமோபைல், ஜவுளி உற்பத்தியும் இல்லை. இதனால் இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிகப் பெரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. நடப்பு 2020-21 நிதியாண்டில் கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
Samayam Tamil 21 நாட்களில் இந்தியாவுக்கு இவ்வளவு இழப்பா


மார்ச் 25ஆம் தேதியில் தொடங்கிய ஊரடங்கால் முதலீடுகள், ஏற்றுமதி, உள்நாட்டு நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றில் 70 சதவீதம் வரையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் இந்தியா தத்தளித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக மைய ஆராய்ச்சி நிறுவனம் (CIR) தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, 21 நாட்கள் ஊரடங்கு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.7 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடிக்கும் ஊரடங்கு: தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அக்கியூட் ரேட்டிங்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்த 21 நாட்களில் இந்தியப் பொருளாதாரத்தில் ரூ.7.5 லட்சம் கோடி வரையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருந்தது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.35,000 கோடி என்ற அளவில் பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஊரடங்கு காலத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் ரூ.35,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளில் ஒரு லாரிக்கு ரூ.2,200 என்ற அளவில் இழப்பு இருந்துள்ளது.

வீடு விற்பனையை முடக்கிய கொரோனா வைரஸ்!

சரக்குப் போக்குவரத்து, உணவகம், தங்கும் விடுதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள்தான் ஊரடங்கு உத்தரவால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதுபோன்ற சூழலில் ஊரடங்கு உத்தரவு காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்