ஆப்நகரம்

மூன்று மாதங்களுக்கு யாரும் ஈஎம்ஐ கட்ட வேண்டாம்!

வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணையைச் செலுத்துவதற்கு மூன்று மாதங்களுக்குக் கால அவகாசம் வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 6:19 pm
கொரோனா பீதியால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கொரானா பாதிப்பு தொடரும் பட்சத்தில் ஊரடங்கு உத்தரவு காலமும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நீட்டிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பணப் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. ஒருபுறம் நிலைமை இப்படி இருக்க, மறுபுறம் வங்கிக் கடன்களும், ஈஎம்ஐ எனப்படும் மாதத் தவணைகளும் கழுத்தை நெரிப்பதாக உள்ளன.
Samayam Tamil சக்திகாந்த தாஸ்


எனவே வங்கிக் கடன்களைச் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது வட்டிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை வலியுறுத்தின. இதுபோன்ற சூழலில் இன்று ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கொரோனா பீதியால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

ரெப்போ வட்டிக் குறைப்பை வரவேற்கும் நிர்மலா!

இதுமட்டுமல்லாமல், வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஈஎம்ஐ கட்டத் தேவையில்லை. அதன் பின்னர் கட்டினால் போதும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மாதத் தவணைத் தொகையை இந்த மூன்று மாதங்களுக்கு வங்கிகள் பிடித்தம் செய்யாது. இச்சலுகையை அனைத்து வங்கிகளும் தங்களிடம் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கிட வேண்டும்.

பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட கொரோனா!

விவசாயக் கடன், சில்லறைக் கடன், பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து கால அளவிலான கடன்களுக்கும், தேசிய வங்கிகள், பிராந்திய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், கிராம வங்கிகள், நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த அறிவிப்பானது ஈஎம்ஐ செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது மட்டுமே தவிர, அதை ரத்து செய்வதற்கானது அல்ல. வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன்களுக்கு உள்ள அனைத்து விதிமுறைகளும் செயல்பாட்டிலேயே இருக்கும். வட்டித் தொகை எவ்வளவு இருந்ததோ அதை அப்படியே செலுத்தியாக வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்த அறிவிப்பால் கடன் பெற்றவர்களுக்கான கடன் மதிப்பீட்டில் எவ்வித மாறுதலும் இருக்காது. வாங்கிய கடனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அவகாசம், வட்டித் தொகை உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்