ஆப்நகரம்

கொரோனா நிவாரணம்: 33 கோடிப் பேருக்கு அரசின் நிதி!

கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.31,235 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Apr 2020, 6:31 pm
கொரோனா பீதியால் மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு வெளியானபோது பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. வேலை இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவுக்கே வழியில்லாமல் போகலாம் என்று மக்கள் அஞ்சினர். விவசாயம், சிறு தொழில், தினக் கூலி வேலைகளை நம்பியிருக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரச் சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள், மூன்று மாதங்களுக்கு தலா ரூ.1,000, ஜன் தன் கணக்கில் பெண்களுக்கு ரூ.500 எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
Samayam Tamil கொரோனா நிவாரணம்_ 33 கோடிப் பேருக்கு அரசின் நிதி


இதன்படி, ஏப்ரல் 22ஆம் தேதி வரையில் ஏழை மக்கள் 33 கோடிக்கும் அதிகமானோருக்கு ரூ.31,235 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ், 20.05 கோடிப் பெண்களுக்கு மொத்தம் ரூ.10,025 கோடி செலுத்தப்பட்டுள்ளது. வயதான விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான நிதியுதவித் திட்டத்தில் 2.82 கோடிப் பேருக்கு மொத்தம் ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,146 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி!

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள் விரைந்து வழங்கப்படுவதை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்கின்றன. உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு நிவாரண உதவிகள் சென்று சேருவதை உறுதிசெய்வதற்காக நிதியமைச்சகமும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் அதிகாரிகளும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. பயனாளிகளுக்குப் பணம் செலுத்துவதற்காக Fintech மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தில் பயனாளிகளின் கணக்கிற்கே பணம் செலுத்தப்படுவதால் தவறானவர்களின் கைகளுக்குப் பணம் போய்விடாமல் தடுக்கப்பட்டு, திட்டத்தின் செயல் திறன் அதிகரிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்