அகவிலைப்படி உயர்வு!
நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வைக்கப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 34 சதவீதமாக உள்ளது.
நிலுவைத் தொகை!
மத்திய அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான 18 மாத நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அதை வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இல்லை!
கொரோனா பிரச்சினை காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டதில் இருந்து அதற்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், நிலுவைத் தொகை குறித்த விவாதம் இல்லை என்று மத்திய அரசு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. அகவிலைப்படி நிவாரணத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதியமைச்சகம் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிடைக்குமா கிடைக்காதா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த டிஆர் மற்றும் டிஏ நிலுவைத் தொகை ரூ.34,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய விதிகளை மறுஆய்வு செய்வதற்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிலைக்குழுவின் 32வது கூட்டத்தில், டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரக்தியில் ஊழியர்கள்!
பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஓய்வூதியதாரர்களின் நலனைக் கவனித்து வருவதாகவும், அவர்களின் குறைகளை பல நிலைகளில் நிவர்த்தி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அதேநேரம், அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.