ஆப்நகரம்

எகிறும் வீட்டு வாடகை.. அதிரடி உயர்வால் குடியிருப்போர் அவதி!

இந்தியாவின் முன்னணி நகரங்களில் வீட்டு வாடகை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 15 Feb 2023, 11:22 am
சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் அந்த மாதத்துக்கான செலவுகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப செலவு செய்வார்கள். சிலருக்கு வாங்கும் சம்பளம் தங்களது செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்கும். ஆனால் பெரும்பாலானோருக்கு சம்பளத்தை விட செலவுகள் இன்னும் அதிகமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல், மருத்துவச் செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகள் வந்துவிடும். ஆனால் மாதம் எவ்வளவு செலவாகும் என்று முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்ப செலவு செய்து பட்ஜெட் போட்டு வாழ்பவர்கள் அதிகம்.
Samayam Tamil rent


ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளத்தில் பெரிய செலவு என்பது வீட்டு வாடகைதான். சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 20 முதல் 25 சதவீதம் வரை வீட்டு வாடகைக்கே செலவிட வேண்டியிருக்கும். இதனால்தான் நிறையப் பேர் கடன் வாங்கியாவது லீஸுக்கு சென்றுவிடுகின்றனர். இதில் மாதச் செலவு இல்லை. கடைசியில் அசல் தொகையும் கைக்கு வந்துவிடும்.

வீட்டு வாடகையைப் பொறுத்தவரையில் வீட்டின் உரிமையாளர்கள் குறைந்தது ஒரு ஆண்டு கழித்து வாடகையை உயர்த்திவிடுகிறார்கள். சிலர் இரண்டு ஆண்டுகள் கழித்தோ அல்லது மூன்று ஆண்டுகள் கழித்தோ உயர்த்துவார்கள். ஆனால் சிலர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட உயர்த்துவார்கள். சிலர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று உயர்த்திவிடுவார்கள். இது குடியிருப்போருக்கு பெரும் நெருக்கடியைத் தரும். இந்தியாவில் இப்போது வீட்டு வாடகை தொடர்ந்து உயர்ந்து வருவதை ஆய்வு ஒன்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராபர்டி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டு வாடகை 23 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ரஜரத், இஎம் பைபாஸ் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் மாத வாடகை 16 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பாலிகுஞ்ச் நகரத்தில் 2000 சதுர அடி கொண்ட வீட்டின் வாடகை 11,000 ரூபாய் உயர்ந்து, 97,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, அலிபோரா நகரத்தில் வீட்டு வாடகை 4000 ரூபாய் உயர்ந்து 65,000 ரூபாய்க்கு வந்துள்ளது.

ஆன்லைன் மூலமாக லோன்.. நிறுவனங்களுக்கு கடும் உத்தரவு!
பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் சார்ந்த நகரங்களில் வீட்டு வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது. கொரோனா பிரச்சினை முடிந்து மீண்டும் அனைவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளதால் பணி நிமித்தமாக நிறையப் பேர் மீண்டும் வாடகை வீட்டுக்கு வந்துள்ளனர். இதனால் தேவை அதிகரித்து வீட்டு வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி, ஈஎம்ஐ, பராமரிப்புச் செலவு, பணவீக்கம், டிமாண்ட் போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி வீட்டின் வாடகையை உரிமையாளர்கள் உயர்த்துகின்றனர். ஆனால் பொதுமக்களுக்கும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் இருப்பதால் வாடகை உயர்வு அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்