ஆப்நகரம்

‘விஷத்தனம்’.. அதானி பதிலடி.. கிடுகிடுவென உயர்ந்த பங்குகள்!

கென் அறிக்கைக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து அதானி பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 29 Mar 2023, 11:15 am
Adani stocks: அதானி குழுமம் கடன்களை முழுவதுமாக அடைத்துவிட்டதாக விளக்கம் அளித்ததை தொடர்ந்து இன்று பங்கு வர்த்தகத்தின்போது அதானி பங்குகள் ஏற்றம் அடைந்துள்ளன.
Samayam Tamil adani
adani


அதானி குழுமம் அண்மையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. இதனால் அதானி பங்குகளும் சரிந்துவிட்டன.

பின்னர் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அதானி குழுமம் கடுமையாக முயற்சித்து வருகிறது. இதற்காக, பங்குகளை அடமானம் வைத்து வாங்கிய 2.15 பில்லியன் டாலர் கடன்களை அடைத்துவிட்டதாக அண்மையில் அதானி குழுமம் தெரிவித்தது.

எனினும், அதானி குழுமம் இன்னும் கடன்களை முழுவதுமாக அடைக்கவில்லை என தி கென் (The Ken) நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில், பங்குகளை அடமானம் வைத்து பெற்ற கடன்களை அதானி அடைத்துவிட்டதாக கூறினாலும், இன்னும் பங்குகளை வங்கிகள் விடுவிக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

வழக்கமாக, கடன்களை செலுத்தியபின் உடனடியாக பங்குகள் விடுவிக்கப்பட்டுவிடும். ஆனால், அதானி பங்குகள் விடுவிக்கப்படவில்லை என்பதால் பாதி கடன்களை மட்டுமே அதானி செலுத்தியுள்ளதாக கென் அறிக்கை கூறியது.

இதனால், நேற்று பங்கு வர்த்தகத்தின்போது அதானி குழுமத்தின் எல்லா நிறுவனங்களின் பங்குகளுமே சரிந்துவிட்டன. இந்நிலையில், கென் அறிக்கைக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. பங்குகளை அடமானம் வைத்து பெற்ற 2.15 பில்லியன் டாலர் கடன்களையும் அடைத்துவிட்டதாக அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

கென் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை எனவும் அது விஷத்தனமான அறிக்கை எனவும் அதானி வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளது. அனைத்து பங்குகளும் முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து இன்று பங்கு வர்த்தகத்தில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் அடைந்துள்ளன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்