ஆப்நகரம்

கொரோனாவைக் காட்டி சம்பளத்தைக் குறைக்கும் ஏர் இந்தியா!

கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் குறைந்துள்ளதால் ஊழியர்களுக்கான சம்பளத்தை 5 சதவீதம் வரையில் குறைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

Samayam Tamil 19 Mar 2020, 6:33 pm
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடந்த இரண்டு வாரங்களாகவே இந்தியாவில் விமானங்கள், ரயில்கள், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்க்கும்படி அரசு தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்துப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கும் இத்துறையைச் சார்ந்த நிறுவனங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனாவைக் காட்டி சம்பளத்தைக் குறைக்கும் ஏர் இந்தியா


விமானப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரையில், சர்வதேச விமானப் பயணங்களை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. உள்நாட்டிலும் விமானப் பயணங்கள் குறைந்துள்ளன. இதனால் நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் சுமையைக் குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்துள்ளதாகத் தெரிகிறது.

ரயில் பாதையைச் சிதைத்த கொரோனா வைரஸ்!

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான சர்வதேச விமானப் பயணங்களை ஏர் இந்தியா ரத்து செய்துள்ள நிலையில், தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை 5 சதவீதம் குறைக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 விமான ஓட்டிகளை வேலையைவிட்டு நீக்கப்போவதாகவும் தகவல் கசிந்துள்ளது. எரிபொருள் சலுகையிலும் 10 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா முடிவுசெய்துள்ளது.

சர்வதேச விமானச் சேவையை விழுங்கிய கொரோனா!

நிதி நெருக்கடியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்பனை செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முயற்சி நடைபெற்றது. ஆனால், அதன் பங்குகளை வாங்க ஒருவர்கூட முன்வராததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. தற்போது சில சலுகையுடன் இரண்டாவது முறையாக விற்பனை முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதனால், ஏர் இந்தியாவின் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்ற சூழலில், கொரோனா காரணமாக ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுவது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்