உங்கள் பணத்தை வைத்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி?
நீங்கள் முதலீடு செய்த பணத்தை 124 மாதங்களில் (10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்) இரண்டு மடங்காக மாற்ற முடியும். எப்படி தெரியுமா? 1988ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறையால் ‘கிசான் விகாஸ் பத்திரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை வைத்து எப்படி உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவது என்பதை பார்க்கலாம்.
முதலீடும் லாபமும்
இத்திட்டத்தின் கீழ் தற்போது 6.9 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த வரம்பும் இல்லை. இத்திட்டத்தில் உறுதியான வருமானம் இருப்பதால் ரிஸ்க் குறைவான முதலீட்டு வாய்ப்பாக கருதப்படுகிறது.
தகுதி
இத்திட்டத்திற்கு தேவையான தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். உங்கள் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். குறிப்பாக, கிராமப்புற மக்களே இத்திட்டத்தின் கீழ் அதிகம் பயனடைகின்றனர்.
குடும்பத்தில் எத்தனை பேர் வாங்கலாம்?
கிசான் விகாஸ் பத்திரத்தை ஒரு நபரோ, அல்லது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களோ (அதிகபட்சமாக) விலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். வயது வராத குடும்ப நபரின் பேரில் வயது வந்த ஒருவரும் பெற்றுக்கொள்ளலாம். வயது வராத நபர்களின் பேரி வாங்கும் பத்திரத்தில் சரியான பிறந்த தேதி, பெற்றோர் விவரங்களை வழங்க வேண்டும். வயது வராத நபர் 10 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
எங்கு வாங்க வேண்டும்?
கிசான் விகாஸ் பத்திரம் பாஸ்புக் வடிவில் வழங்கப்படும். அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழை ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கும், ஒரு அஞ்சல் அலுவலக கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கும் மாற்றிக்கொள்ளலாம்.
பணம் எப்போது கிடைக்கும்?
பத்திரம் வழங்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டரை ஆண்டுகள் (30 மாதங்கள்) முடிந்தவுடன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இறுதிப் பணத்தை எடுக்கும் வரை மெச்சூரிட்டி மூலம் வட்டி உயர்ந்துகொண்டே இருக்கும்.
வருமான வரி உண்டா?
இத்திட்டத்தில் ஒரே ஒரு பாதகம் என்னவென்றால், இதின் கீழ் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இப்பத்திரத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம் Other Sources மூலம் ஈட்டிய வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.