ஆப்நகரம்

வீட்லயே வேலை பாருங்க: அமேசான் இந்தியா அறிவிப்பு!

அக்டோபர் மாதம் வரையில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்படி ஊழியர்களுக்கு அமேசான் இந்தியா நிறுவனம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Samayam Tamil 12 May 2020, 12:51 pm
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டது. இக்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல், ஊடகம், ஆன்லைன் உள்ளிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை முடிந்தவரையில் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதித்தன. இதன்மூலம் ஊழியர்களுக்கு வருமானம் கிடைத்ததோடு, நிறுவனங்களும் பயன்பெற்றன.
Samayam Tamil amazon india


கொரோனா பாதிப்புகள் குறையாத நிலையில் ஊரடங்கு உத்தரவு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, மே 17 வரையில் அமலில் இருக்கிறது. இருப்பினும் சில துறைகளில் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி கிடைத்தது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதியுடையவர்கள் இம்மாதம் முடியும் வரை வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன. ஊரடங்கு முடிந்தபின்னரும் சிறிது காலத்துக்கு பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பிரிவுகளில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. தேவையான அளவுக்கு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்தால் போதும் என்று கூறப்பட்டது.

இந்த கொரோனா காலத்தில் எதில் முதலீடு செய்யலாம்?

அந்த வகையில், ஆன்லைன் மின்னணு வர்த்தக சேவையில் ஈடுபட்டு வரும் அமேசான் இந்தியா நிறுவனம் இன்னும் மூன்று மாதங்களுக்குத் தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைபார்க்க உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2 வரையில் வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமேசான் இந்தியா நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு இயக்குநரான தீப்தி வர்மா தெரிவித்துள்ளார். எனினும் எந்தெந்தப் பிரிவில் உள்ள ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்த விவரங்களை அமேசான் இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை.

தளர்ந்தது ஊரடங்கு... குறைந்தது வேலையில்லாத் திண்டாட்டம்!

அமேசான் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஃபிளிப்கார்ட் பெங்களூரு அலுவலகத்தில் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளது. ஊழியர்களைக் குழு வாரியாகப் பிரித்து, வீட்டிலிருந்தும் அலுவலகத்தில் இருந்தும் சேவைகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் வேலை பார்க்க ஃபிளிப்கார்ட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பீதியால் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளன. கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்கள் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்