ஆப்நகரம்

சிலிண்டர் மானியம் இனி கிடைக்காது? வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

சிலிண்டர் மானியம் விரைவில் நிறுத்தப்படுமா? வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.

Samayam Tamil 19 May 2022, 4:30 pm
இன்று கேஸ் சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 1018.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, சிலிண்டருக்கான மானியம் மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிலிண்டர் மானியம் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?
Samayam Tamil are lpg subsidies are on their way to be abolished all you need to know about current situation
சிலிண்டர் மானியம் இனி கிடைக்காது? வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!


​சிலிண்டர் மானியம்

முதலில், சிலிண்டருக்கான மானியத்தை பொறுத்தவரை, மானியத் தொகை கழிந்தபின் மீதமுள்ள தொகையை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக்கொள்ளும் நடைமுறை அமலில் இருந்தது. எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியத் தொகையை அரசே நேரடியாக செலுத்திவிடும்.

​நேரடி மானியம்

பின்னர் ஆதார் இணைப்பு முறை கொண்டுவரப்பட்ட பிறகு, வாடிக்கையாளர் சிலிண்டருக்கான மொத்த தொகையையும் செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ள வேண்டும். அதில் உரிய மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.

​மானியம் நிறுத்தம்

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. அப்போது 2020 மே மாதம் மத்திய அரசு சிலிண்டர் மானியம் வழங்குவதை நிறுத்தியது. எனினும், தற்போது குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் மானியம் வழங்கி வருகிறது மத்திய அரசு.

​யாருக்கெல்லாம் மானியம்?

10 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிலும் பலருக்கு மானியம் வருவதில்லை என கூறுகின்றனர். மேலும், உஜ்வாலா திட்டத்தின் கிழ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்க்ளுக்கு மானியம் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு மானியம் வழங்குவதை அரசு நிறுத்திவிட்டது. இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் சேமிக்கப்பட்டுள்ளது.

​எவ்வளவு மானியம்?

சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் கிடைக்கிறது என பார்த்தபோது, சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு (இண்டேன்) மாதம் 24.95 ரூபாய் மானியம் செலுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இன்றைய சிலிண்டர் விலையை வைத்து பார்க்கும்போது மானியம் மிக குறைவான தொகையாகவே உள்ளது.

​நிதியமைச்சர் குற்றச்சாட்டு

சிலிண்டர் மானியம் தொடர்பாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், “சிலிண்டர் மானியத்தை முழுவதுமாக நிறுத்துவதற்காகவே வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 2020 மே மாதம் முதல் சிலிண்டர்களுக்கு மானியமே அறிவிக்கப்படவில்லை. இதன் விளைவாக, 2018ஆம் ஆண்டில் 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

​அரசுக்கு எவ்வளவு சேமிப்பு?

இதுதொடர்பாக, நாக்பூரை சேர்ந்த அபய் கோலர்கார் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுவிற்கு கிடைத்த பதிலில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. 2019ஆம் நிதியாண்டில் சிலிண்டர் மானியத்துக்கு மத்திய அரசு 37,585 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால், 2022ஆம் நிதியாண்டில் கடந்த டிசம்பர் வரை சிலிண்டர் மானியத்துக்கு வெறும் 2,706 கோடி ரூபாய் மட்டுமே அரசு செலவிட்டுள்ளது. இதனால் 2022 நிதியாண்டில் மட்டும் டிசம்பர் வரை சுமார் 34,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசு சேமித்துள்ளது.

​மானியம் முடிவுக்கு வருகிறதா?

சிலிண்டர் மானியம் முடிவுக்கு வருகிறதா என்பது பற்றி கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் பேசினோம். அதற்கு, காலப்போக்கில் மானியம் எல்லாம் நிறுத்தப்பட்டு மொத்தமாக சிலிண்டர் விலையை கொடுத்தே வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டிய நிலை வந்துவிடும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில்.

​உங்களுக்கு மானியம் வருகிறதா?

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வருகிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

* mylpg.in இணையதளத்திற்குச் செல்லவும்.

* வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும்.

* அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.

* புதிய துணைப்பக்கம் ஒன்று திறக்கும். பார் மெனுவுக்குச் சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்யவும்.

* உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை நிரப்பவும்.

* இதற்குப் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ என்பதை கிளிக் செய்யவும்.

* உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா இல்லையா என்பதை அதில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்