ஆப்நகரம்

ஆட்டம் கண்ட ஆட்டோமொபைல் துறை: அரசு உதவுமா?

கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டில் வாகன விற்பனை 45 சதவீதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Samayam Tamil 12 May 2020, 4:55 pm
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பீதியால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செலவிடுகின்றனர். புதிய வீடுகள், நகை, வாகனம் உள்ளிட்ட ஆடம்பரச் செலவுகளை மக்கள் குறைத்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை பெருத்த அடி வாங்கியுள்ளது.
Samayam Tamil car


ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட விற்பனையாகவில்லை என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஊரடங்கு நீடித்தால் வரும் மாதங்களிலும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறையிலும் அச்சம் நிலவுகிறது. அரசு தரப்பிலிருந்து ஆதரவு கோரியுள்ள ஆட்டோமொபைல் துறையினர், வரியைக் குறைக்க வேண்டும், எஞ்சின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும், இதுபோன்ற விதிமுறைகளுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாட் வரியை உயர்த்திய சவுதி... கொரோனா படுத்தும் பாடு!

மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், மகிந்திரா & மகிந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கைக் கடிதத்தில், இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் 2 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தால், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு 45 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் சென்ற நிதியாண்டில் வாகன விற்பனை 18 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பால் இழப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.

அரசின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த நெருக்கடியான சூழலைச் சமாளித்து மீண்டு வர முடியும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்