ஆப்நகரம்

வாடிக்கையாளரை ஏமாற்றிய வங்கிக்கு ரூ.8,000 அபராதம்

வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் ரூ.12 பிடித்தம் செய்த வங்கிக்கு ரூ.8,000 அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 12:27 pm
நெல்லை: வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் ரூ.12 பிடித்தம் செய்த வங்கிக்கு ரூ.8,000 அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil canara-bank


நெல்லை தியாகராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவரது கனரா வங்கி கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி 24 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.

இது பற்றி அவர் வங்கி நிர்வாகத்திடன் விசாரித்தபோது பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்தது தெரிய வந்தது. தன்னிடம் முன் அனுமதி பெறாமலும் தகவல் தெரிவிக்காமலும் வங்கி கணக்கிலிருந்து 24 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை வங்கிக்கு தொடர்புகொண்டு புகார் கூறியுள்ளார்.

இதனை வங்கி மேலாளருக்கு புகார் மனுவாகவும் அனுப்பி வைத்தார். பின்னர், அவரது வங்கிக் கணக்கில் 12 ரூபாய் மட்டும் திரும்பச் செலுத்தப்பட்டது. மீதம் 12 ரூபாயை திருப்பிச் செலுத்தவில்லை.

இதனால், தனது அனுமதி இல்லாமல் வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்த தொகையைத் திருப்ப வங்கிக் கணக்கில் செலுத்தக்கோரி மீண்டும் வங்கி மேலாளரிடம் புகார் செய்தார். ஆனால், 12 ரூபாய் கிடைக்கவில்லை.

இதனால், மணிகண்டன் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில், தீர்ப்பளித்த நீதிமன்றம் மணிகண்டனுக்கு கனரா வங்கி செய்தது சேவைக்குறைபாடு என்பதால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5,000 ரூபாயும் வழக்கு செலவு தொகை ரூபாய் 3,000 ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூபாய் 8,000 வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை ஒரு மாத காலத்துக்குள் மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கத் தவறினால் 6 சதவிகிதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்