ஆப்நகரம்

பணம் வராது.. பால் தான் வரும்.. வந்தாச்சு பால் ஏடிஎம்!

பெங்களூருவின் முதல் பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. இனி 24 மணி நேரமும் பால் வாங்கலாம்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 12 May 2023, 12:54 pm
முன்னொரு காலத்தில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் மணிக் கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய சிரமம் இருந்தது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஏடிஎம் மெஷின்கள் அமைக்கப்பட்டன. முதலில் ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கும் வசதி மட்டுமே இருந்தது. பேலன்ஸ் பார்ப்பது போன்ற சில பணமில்லா பரிவர்த்தனை வசதிகளும் இருந்தன. அதன் பின்னர் காலப்போக்கில் பணம் டெபாசிட் செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டது. ஏடிஎம்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இரவு, பகல் என 24 மணி நேரமும் பணம் எடுக்கவும் போடவும் முடியும்.
Samayam Tamil milk atm



பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்லாமல், இப்போது பல்வேறு விஷயங்களுக்கு ஏடிஎம் மெஷின்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பால் ஏடிஎம். இந்த பால் ஏடிஎம்களில் பொதுமக்கள் பணத்தைச் செலுத்தி தாங்களாகவே பால் வாங்கிக் கொள்ளலாம். அங்கு மற்றவர்களின் உதவி தேவைப்படாது. வரிசையில் நிற்பது, மணிக்கணக்கில் காத்துக் கிடப்பது போன்ற சிரமங்கள் இருக்காது. மிக முக்கியமாக 24 மணி நேரமும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில், பெங்களூருவில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. வினோத் குணசேகரன் என்ற எம்.பி.ஏ. பட்டதாரிதான் இந்த பால் ஏடிஎம்மைத் திறந்துள்ளார். அவரது V Dairy Ventures என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமாக இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பது மக்கள் 24 மணி நேரமும் பால் வாங்கிக் கொள்ளலாம். பால் கெட்டுப்போகாத வகையில் சிறந்த தொழில்நுட்பத்துடன் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பால் ஏடிஎம் மெஷினில் 5 ரூபாய் நாணயம், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எவ்வளவு பால் வேண்டுமோ அதை தேர்வு செய்து அதற்கான தொகையைச் செலுத்தினால் போதும். பால் வாங்குவதற்கான பாத்திரத்தை கொண்டுவர வேண்டும். அதில் நிரப்பி எடுத்துச் செல்லலாம். வழக்கமான பால் ஏடிஎம்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால்தான் கிடைக்கும். ஆனால் இந்த பால் ஏடிஎம்மில் தேவையான அளவு பாலை பாத்திரத்தில் நிரப்பிக் கொள்ளலாம்.

இந்த மெஷினில் பால் வாங்குவதற்கு பிரத்தியேகமாக ஒரு ஏடிஎம் கார்டும் வழங்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் அதை வாங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் சில்லறை பிரச்சினை இல்லாமல், மிகச் சுலபமாகக் பால் வாங்க முடியும். தற்போதைய நிலையில், பெங்களூரில் இரண்டு அப்பார்மெண்ட்களில் மட்டுமே இந்த பால் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் பல்வேறு இடங்களில் அமைக்கும் திட்டத்தில் இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்