ஆப்நகரம்

பிடிஆர் சொல்வது சரிதான்.. சுப்ரமணியன் சாமி பாராட்டு!

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்வது சரிதான் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 Apr 2023, 5:47 pm
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiagarajan) அவ்வப்போது கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்று தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதில் அவரது பெரும்பாலான பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன.
Samayam Tamil ptr palanivel thiagarajan - subramanian swamy
ptr palanivel thiagarajan - subramanian swamy


இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய ஆட்சியாளர்கள் குறித்து விமர்சித்து பேசினார். மேலும், சாதாரண விஷயங்கள் கூட ஊதி பெரிதாக்கப்பட்டு விளம்பரம் செய்யப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

அந்த நிகழ்வில் பேசிய பிடிஆர், “இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு என்பது திடீரென தேசிய பெருமை என கூறும் அளவுக்கு இருக்கும் சூழலை எப்படி விவரிப்பது என்றே எனக்கு தெரியவில்லை. இந்தியாவுக்கு ஜி20 தலைமை பொறுப்பு கிடைத்துள்ளது.

ஜி20 தலைமை பொறுப்பு கிடைத்தது எதற்காவது அறிகுறியா? இல்லை. ஜி20 தலைமை என்பது சுழற்சி முறையில் வருவது. பின்னர் ஏன் ஜி20 தலைவர் என வீண் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?

ஜிஎஸ்டி வருவாய் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது என ஒவ்வொரு மாதமும் அறிக்கை வருகிறது. பணவீக்கத்தின் இயற்கையாலும், நாம் ஒரு பெரிய மக்கள் தொகை, பெரிய பொருளாதாரம் என்பதாலும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் உயர வேண்டும். அதில் என்ன பெருமை இருக்கிறது?

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளருவதாக சொல்கின்றனர். குறைவான அடிப்படை விளைவு (low base effect) என ஒரு விஷயம் இருக்கிறது. கொரோனா பாதிப்பின்போது இந்தியாவை போல வேறு எந்த நாட்டுக்கும் பொருளாதார பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோனா காலத்தில் இந்திய பொருளாதாரம் 8% சரிந்தது. அந்த சூழலிலும் கூட தமிழ்நாடு வளர்ந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது, மற்ற நாடுகளின் பொருளாதாரங்கள் எப்படி இருந்தன என்பதை பார்த்துவிட்டு இப்போது என்ன சூழல் என்பதை பாருங்கள்” என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோவை குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி ட்விட்டரில், “முற்றிலும் சரியானது” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்