ஆப்நகரம்

41 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் கொடுத்த மத்திய அரசு!

வருமான வரி செலுத்திய 41.25 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 12:49 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் நாட்டு மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, வங்கிக் கடன் செலுத்துவது, வரி செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. அதோடு, வரி செலுத்தியோருக்குத் திரும்பி வரவேண்டிய ரீஃபண்ட் தொகையையும் வருமான வரித் துறை வேகமாக வழங்கி வருகிறது.
Samayam Tamil refund


அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நவம்பர் 24ஆம் தேதி வரையில் மொத்தம் 41.25 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1,36,962 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 39.28 லட்சம் பேருக்கு ரூ.36,028 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கார்பரேட் வரி பிரிவின் கீழ் 1.96 லட்சம் பேருக்கு ரூ.1,00,934 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரூ.2,000 தரும் மோடி அரசு... பணம் எப்போ வருது தெரியுமா?

முன்னதாக, நவம்பர் 10ஆம் தேதி வரையில் மொத்தம் 39.75 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.32 லட்சம் கோடி வழங்கப்பட்டிருந்தது. இதில் தனிநபர் வருமான வரியாக மொத்தம் 37.81 லட்சம் பேருக்கு ரூ.35,123 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல, கார்பரேட் வரியின் கீழ் 1.93 லட்சம் பேருக்கு ரூ.97,677 கோடியும் வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டே ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்கி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்