ஆப்நகரம்

ஜிஎஸ்டி இழப்பீடு: ரூ.6,000 கோடி வழங்கிய மத்திய அரசு!

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.6,000 கோடியை 18 மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு.

Samayam Tamil 24 Oct 2020, 9:19 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
Samayam Tamil gst


தற்போதைய கொரோனா நெருக்கடி சமயத்தில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இப்போதைக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைத் தர இயலாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஏப்ரல் 1 முதல் தற்போது வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பினர். ஆனாலும் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், மாநிலங்களுக்கு கடன் வாங்க மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

வரித் தாக்கல் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?

இந்நிலையில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக மத்திய அரசு கடன் சந்தைகளில் இருந்து ரூ.6,000 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இந்தத் தொகையை மகாராஷ்டிரா, குஜராத், பீகார், அஸ்ஸாம், டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கும் 2 யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக ரூ.1.1 லட்சம் கோடி வரையில் கடன் வாங்குவதாக மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது. மத்திய அரசு வழங்கியிருந்த கடன் திட்டத்துக்கு 21 மாநிலங்களும் 2 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே ஒப்புதல் தெரிவித்துள்ளன. அதில் 5 மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்