ஆப்நகரம்

Cisco: சென்னையில் சிஸ்கோ ஆலை.. 1 பில்லியன் டாலர் உற்பத்தி இலக்கு!

சென்னையில் சிஸ்கோ நிறுவனம் புதிய உற்பத்தி ஆலை அமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 May 2023, 5:13 pm
அமெரிக்காவை சேர்ந்த பிரபல டிஜிட்டல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ (Cisco) தற்போது தமிழ்நாட்டில் (Tamil Nadu) புதிதாக உற்பத்தி ஆலையை அமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil Cisco
Cisco



சிஸ்கோ நிறுவனம் டிஜிட்டல் தொலைத்தொடர்பு துறைக்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், சிஸ்கோ நிறுவனம் சென்னையில் புதிய உற்பத்தி ஆலையை அமைத்து வருவதாகவும், இந்த ஆலை வாயிலாக 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் சிஸ்கோ நிறுவனத்தின் CEO சக் ராபின்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சிஸ்கோவின் புதிய ஆலை அமைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. அடுத்த 12 மாதங்களில் முதற்கட்ட தயாரிப்புகள் இந்த ஆலையில் இருந்து வெளியாகும் என சிஸ்கோ நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமைக்கப்பட்டு வரும் ஆலையில் சிஸ்கோ நிறுவனம் அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடிய switching network மற்றும் router பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தியாகும் பொருட்கள் இந்தியாவுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

வரும் ஆண்டுகளில் உள்நாட்டு தேவை, உற்பத்தி என சென்னை ஆலையில் ஒரு பில்லியன் டாலருக்கு பொருட்களை உற்பத்தி செய்ய சிஸ்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உற்பத்தி மட்டுமல்லாமல் சோதனை, வளர்ச்சி, தளவாடங்கள், பழுது பார்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கும் திட்டமிட்டுள்ளதாக சிஸ்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பொது 5ஜி சேவை மிகப்பெரிய வாய்ப்பாக இருப்பதாகவும், பொது 5ஜி சேவைக்கு தேவையான எல்லா தொழில்நுட்பங்களையும் சிஸ்கோ உருவாக்கி வருவதாகவும், இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் சிஸ்கோ CEO சக் ராபின்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில், டாவோஸ் உலக பொருளாதார மன்றத்திலும், அமெரிக்காவிலும் சிஸ்கோ நிறுவனத்துடன் முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அவர்களுக்கு முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சிஸ்கோ நிறுவனத்தை தமிழ்நாட்டுக்கு முழுமனதுடன் வரவேற்பதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்