ஆப்நகரம்

ஆதார் - பான் இணைப்பு இலவசம்.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்!

ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கு அபராதத்தை ரத்து செய்யும்படி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 22 Mar 2023, 12:42 pm
இந்திய மக்கள் அனைவரும் ஆதார் - பான் கார்டு கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் - பான் இணைப்பு முன்பு இலவசமாக இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil aadhaar - pan link
aadhaar - pan link


ஆதார் - பான் இணைப்புக்கான கடைசி தேதி வரும் மார்ச் 31ஆம் தேதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடைசி தேதிக்குள் 1000 ரூபாய் அபராதம் செலுத்தி ஆதார் - பான் கார்டு அனைவரும் இணைக்க வேண்டும் எனவும், ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலிழந்துவிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஆதார் - பான் இணைப்புக்கான கடைசி தேதியை ஆறு மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும் எனவும், 1000 ரூபாய் அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், 1000 ரூபாய் செலுத்தி மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டு இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும் என வருவாய் துறை எச்சரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இன்னும் இண்டர்நெட் வசதி கூட இல்லாத தொலைதூர கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிப்பதாகவும், அவர்களை ஏமாற்றும் வகையில் ஆதார் - பான் கார்டுகளை இணைக்க எளிய மக்களை சில கும்பல்கள் ஏமாற்றி அதிக பணம் வசூலித்து வருவதாகவும் ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து தபால் அலுவலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மக்கள் இலவசமாக ஆதார் - பான் இணைத்துகொள்ளலாம் என அறிவிக்கும்படி நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட பிரதமர் மோடியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆதார் - பான் இணைப்புக்கான கடைசி தேதியை குறைந்தது 6 மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்