ஆப்நகரம்

முதியவரை ஏமாற்றி செக் மூலம் ரூ.11 லட்சம் அபேஸ்

குருமல்லையாவுக்கு வந்த தகவலில் பத்து காசோலைகள் மூலம் 11.8 லட்சம் ரூபாய் அவருடைய வங்கிக்கணக்கிலிருந்து கழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. முதல் கட்ட விசாரணைக்குப் பின் மதுவின் வங்கிக் கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.

Samayam Tamil 8 Jul 2019, 4:55 pm
குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற்றுத் தருவதாக முதியவரை ஏமாற்றி 11 லட்சம் ரூபாய்க்கு மேல் பறித்த ஆசாமிக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
Samayam Tamil bank


கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பி.இ.எம்.எல். லேஅவுட்டில் வசிப்பவர் குருமல்லையா. பி.இ.எம்.எல். நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான இவருக்கு 61 வயது ஆகிறது.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே 4 சதவீதம் வட்டியில் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெற்றுள்ளார். இவர் மீண்டும் வீட்டுக்கடன் வாங்க திட்டமிட்டபோது, மது என்பவர் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். தன்னை வங்கி அதிகாரிபோல காட்டிக்கொண்ட மது ஏற்கெனவே குருமல்லையா வாங்கிய வங்கிக் கடனுக்கு விதிக்கப்பட்டதைவிட குறைவான வட்டியில் கடன் வாங்கித்தருவதாக வாக்களித்துள்ளார்.

ஜூன் மாத இறுதி வாரத்தில் குருமல்லையாவுக்கு போன் செய்த மது, 9.05 சதவீதம் வட்டியில் வீட்டுக்கடன் கிடைத்துவிடும் என்றும் அதற்கு உரிய ஆவணங்களுடன் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன்படி, ஜூலை 4ஆம் தேதி நேரில் சென்று மதுவிடம் பல ஆவணங்களை ஒப்படைத்துள்ளார். அப்போது, மது செக்யூரிட்டிக்காக என குருமல்லையாவிடம் பத்து வெற்று காசோலைகளில் (செக்) கையெழுத்து வாங்கியுள்ளார்.

சில நாட்களில் திடீரென வங்கிலிருந்து குருமல்லையாவுக்கு வந்த தகவலில் பத்து காசோலைகள் மூலம் 11.8 லட்சம் ரூபாய் அவருடைய வங்கிக்கணக்கிலிருந்து கழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. உடனே மதுவை அணுக முயன்றபோது அவர் தொடர்புகளை எல்லாம் துண்டித்து மாயமாகிவிட்டது தெரிந்துள்ளது.

இதனால் குருமல்லையா ஜீவன் பீமா நகரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் மது ஏற்கெனவே இதே போல பலரை ஏமாற்றி பணம் பறித்திருப்பதாகக் கூறியுள்ளனர். பனசவாடி, ராஜகோபாலநகர், எலெக்ட்ரானிங் சிட்டி மற்றும் மாரத்தஹள்ளி ஆகிய இடங்களிலும் இதே ஆசாமி தன் வித்தையைக் காட்டியிருப்பதாகவும் அவர் மீது ஆறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் சொல்கிறார்கள்.

முதல் கட்ட விசாரணைக்குப் பின் மதுவின் வங்கிக் கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். விரைவில் மதுவை கைது செய்துவிடுவோம் எனவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்