ஆப்நகரம்

இந்தியப் பொருளாதாரத்தைக் கடிக்கும் கொரோனா!

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ஆய்வு நிறுவனங்கள் குறைத்துள்ளன.

Samayam Tamil 21 Apr 2021, 9:58 pm
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் உற்பத்தி, ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இந்தியப் பொருளாதாரமும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால் இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்குப் பயணிக்கத் தொடங்கியது. 2020-21 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 0.4 சதவீதம் வளர்ச்சி கண்டு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
Samayam Tamil corona


முன்னதாக ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 7.3 சதவீத வீழ்ச்சியை இந்தியா சந்தித்தது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மீண்டும் இந்தியா பின்னோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

மாதம் ரூ.5000 பென்சன் கிடைக்கும்... இது அருமையான திட்டம்!
2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.9 சதவீதம் வரையில் வளர்ச்சி காணும் என்று முன்னதாக கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வளர்ச்சி மதிப்பீடு 10.2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் தனது மதிப்பீட்டை மூன்றாவது முறையாகக் குறைத்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. மற்ற மாநிலங்களிலும் ஊரடங்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்