ஆப்நகரம்

KVP: வட்டி எல்லாம் கூடிப் போச்சு.. இனி அதிக லாபம் கிடைக்கும்!

இரு மடங்கு லாபம் தரும் சூப்பர் திட்டம்!

Samayam Tamil 30 Sep 2022, 11:51 am
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி இனி கிசான் விவாஸ் பத்ரா திட்டத்தில் கூடுதல் வருமானம் உங்களுக்குக் கிடைக்கும்.
Samayam Tamil double income in quick time on this post office scheme interest rate also increased
KVP: வட்டி எல்லாம் கூடிப் போச்சு.. இனி அதிக லாபம் கிடைக்கும்!


தபால் நிலைய சேமிப்பு!

இந்திய தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட கால அடிப்படையில் பொதுமக்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. அதில் மிக முக்கியமான திட்டம்தான் கிசான் விகாஸ் பத்ரா. இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி விடும்.

வட்டி உயர்வு!

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இதுவரையில் 6.9 சதவீத வட்டி நடைமுறையில் இருந்தது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறையும் நிர்ணயம் செய்யப்படும். ஆனால் கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து இதற்கான வட்டி உயர்த்தப்படவே இல்லை. இந்நிலையில், அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வட்டியை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இனி கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 7 சதவீத வட்டி லாபம் கிடைக்கும்.

நிபந்தனைகள்!

கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது-வந்த பாதுகாவலர் அல்லது உறவினர் வாங்க முடியும். ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்தப் பத்திரத்தை மாற்ற முடியும். அதேபோல, ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கும் நீங்கள் பத்திரக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.

முதலீடு எவ்வளவு?

இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000, ரூ.50,000 என வெவ்வேறு மதிப்பில் இத்திட்டத்தின் கீழ் பத்திரங்கள் கிடைக்கின்றன. வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை கிடைப்பது இத்திட்டத்தின் கூடுதல் அம்சமாகும்.

javascript-Custom

பாதுகாப்பான திட்டம்!

கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் இதுபோன்ற உத்தரவாதம் தரும் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். சந்தை நிலவரங்களால் இத்திட்டத்தில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணம் 123 மாதங்களிலேயே இரட்டிப்பாகிவிடும்.

ரெப்போ வட்டியும் உயர்வு!

தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 30) நடைபெற்ற நாணயக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இனி 5.9 சதவீத வட்டி நடைமுறையில் இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்