ஆப்நகரம்

தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்

ஹைதராபாத்தில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மத்திய அரசின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார்.

Samayam Tamil 7 Dec 2018, 4:05 pm
புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார்.
Samayam Tamil Ministry-Of-Finance-696x464


மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கடந்த ஜூன் 20ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு மே வரை இருந்தபோதும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக பணியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து காலியாக இருந்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பொருளாதாரத்துறை வல்லுநர்கள் சிலரது பெயரை மத்திய அரசு பரிசீலித்து வந்தது. உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஹைதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோரது பெயர் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார் எனவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் முனைவர் பட்டம் பெற்ற இவர், செபி கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறார். பந்தன் வங்கி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் மற்றும் ஆர்.பி.ஐ. அகாடமி ஆகியவற்றிலும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்