ஆப்நகரம்

பூக்களின் விலை கடும் உயர்வு.. ஐயப்ப பக்தர்களுக்கு அதிக செலவு!

கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 22 Nov 2022, 4:19 pm

ஹைலைட்ஸ்:

  • மல்லிகைப்பூ கிலோ ரூ.1610 வரை விற்பனை
  • பூ பயிரிடப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil jasmine
கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 1610 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ம்ற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும்.

பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவந்த பிறகு அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்படும். இதுமட்டுமல்லாமல் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது.


மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் சுப முகூர்த்த தினம் என்பதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பூக்களின் தேவை திடீரென்று அதிகரித்துள்ளது. இதனால் மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 1610 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் இயங்கும் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்...

கிலோ ஒன்றுக்கு மல்லிகை பூ 1050 ரூபாய் முதல் 1610 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல, முல்லை பூ 800 ரூபாய் முதல் 880 ரூபாய்க்கும், காக்கடா 500 ரூபாய் முதல் 925 ரூபாய்க்கும், செண்டு மல்லி 15 ரூபாய் முதல் 54 ரூபாய்க்கும், கோழி கொண்டை 20 ரூபாய் முதல் 85 ரூபாய்க்கும், ஜாதி முல்லை 750 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1200 ரூபாய்க்கும், சம்பங்கி 100 ரூபாய்க்கும், அரளி 320 ரூபாய்க்கும், துளசி 40 ரூபாய்க்கும், செவ்வந்தி 140 ரூபாய்க்கும் விற்பனையானது.


அனைத்து பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்து வரும் நாட்களிலும் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சபரிமலை சீசன் என்பதால் பூக்களுக்கான தேவை இக்காலத்தில் வழக்கமாக அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ப விலையும் கடுமையாக உயரும். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் பொதுமக்களுக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்