ஆப்நகரம்

இன்னொரு ஈஎம்ஐ சலுகை கிடைக்குமா? ஆர்பிஐ விளக்கம்!

கடனைத் திருப்பிச் செலுத்த மீண்டும் அவகாசம் கிடைக்குமா?

Samayam Tamil 10 Apr 2021, 3:27 pm
கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், கடன் வாங்கியோருக்கு இன்னொரு ஈஎம்ஐ மொரடோரியம் சலுகை அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியின் விளக்கம் என்ன?
Samayam Tamil expecting another emi moratorium from rbi
இன்னொரு ஈஎம்ஐ சலுகை கிடைக்குமா? ஆர்பிஐ விளக்கம்!


ஊரடங்கில் வந்த சலுகை!

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்க 2020 மார்ச் 24ஆம் தேதியிலிருந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வேலையும் வருமானமும் இல்லாமல் போனதால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, மார்ச் 1 முதல் மே 31 வரையில் ஈஎம்ஐ செலுத்துவதிலிருந்து கடனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு!

கொரோனாவின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மே 31 வரையில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து ஈஎம்ஐ அவகாசமும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆகஸ்ட் 31 வரையில் வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. கடன் தவணைக் காலம் முடிந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், வட்டிக்கே வட்டி வசூலிப்பது, ஈஎம்ஐ சலுகையை நீட்டிப்பது தொடர்பாக முறையிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஊரடங்கு காலத்தில் சிறப்புக் கடன் சலுகையை எடுத்துக்கொண்ட வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான கூடுதல் வட்டியைத் தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மற்றொரு ஈஎம்ஐ சலுகை கிடைக்குமா?

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. வேலை மற்றும் சம்பளம் கிடைக்காமல் மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுபோல கடன் தவணைச் சலுகையை ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

அதற்கு வாய்ப்பு இல்லை!

தற்போது கொரோனா இரண்டாம் அலையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறு குறு நிறுவனங்கள் துறை பாதிப்பைச் சந்தித்துள்ளது. மற்ற இடங்களிலும் இதே சூழல் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், இப்போதைக்கு மீண்டும் ஒரு ஈஎம்ஐ சலுகை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மீண்டும் ஒரு மொரடோரியம் அறிவிக்கப்படாது எனவும், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இப்போது இக்கட்டான சூழலைச் சமாளிக்கும் திறனுடன் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் கொரோனாவின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்து இதுகுறித்த அடுத்த கட்ட முடிவு மேற்கொள்ளப்படும் என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்