ஆப்நகரம்

நாளை முதல் Fastag கட்டாயம்... இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!

பிப்ரவரி 15 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 14 Feb 2021, 6:33 pm
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பிரச்சினையாக இருந்து வருகிறது. சுங்கக் கட்டணம் செலுத்துவதில் தாமதம், சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வாகனங்கள் நீண்ட வரிசையில் மணிக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுங்கக் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகச் செலுத்தலாம் என்பதால் சுங்கச் சாவடிகளில் நெரிசல் குறையும்.
Samayam Tamil fastag


2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு ஃபாஸ்டாக் முறை அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 2020 டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாட்டிலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்டாக் கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஃபாஸ்டாக் பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு அதற்கான கால வரம்பு டிசம்பர் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இதிலும் சிக்கல் நீடித்ததால் ஜனவரி 1ஆம் தேதி முதல் நாட்டிலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்டாக் கட்டண முறை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்தது.

வீடு தேடி வரும் பணம்... உடனே பதிவு பண்ணுங்க!
மூன்றாவது முறையாக கால அவகாசம் வழங்கிய மத்திய அரசு, பிப்ரவரி 15 வரையில் ஃபாஸ்டாக் நடைமுறைக்கு அவகாசம் வழங்கியது. இந்நிலையில், இதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கப்போவதில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஃபாஸ்டாக் கட்டாயமாக்கப்படுகிறது. இதுவரை மூன்று முறை அவகாசத்தை நீட்டித்துவிட்டதாகவும், வாகன உரிமையாளர்கள் உடனடியாக ஃபாஸ்டாக்குக்கு மாறும்படியும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சில இடங்களில் 90 சதவீதம் வரையில் ஃபாஸ்டாக்குகள் எடுக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஃபாஸ்டாக் இல்லாமல் சுங்கச் சாவடிகளில் பயணிக்கும் வாகனங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்