ஆப்நகரம்

2000 ரூபாய் நோட்டுக்கு என்னதான் ஆச்சு? ஏடிஎம்மில் வரவில்லையே.. மத்திய அரசு பதில்!

2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 21 Mar 2023, 11:21 am
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால், அண்மையில் 2000 ரூபாய் நோட்டு கிட்டத்தட்ட புழக்கத்திலேயே இல்லை. பெரும்பாலும் ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் இருக்கின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
Samayam Tamil finance minister nirmala sitharaman responds to a question on 2000 rupees notes supply via atms
2000 ரூபாய் நோட்டுக்கு என்னதான் ஆச்சு? ஏடிஎம்மில் வரவில்லையே.. மத்திய அரசு பதில்!


​காணாமல் போன நோட்டுகள்​

சந்தோஷ் குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியில், “பணமதிப்பிழப்புக்கு பின் வெளியான புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் 9.21 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து காணாமல் போய்விட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையா? அந்த நோட்டுகள் கள்ளநோட்டுகளாக மாறிவிட்டனவா?

ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி தடை ஏதும் விதித்திருக்கிறதா?

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி எப்போது நிறுத்தியது?” என்று கேள்வி எழுப்பினார்.

​நோட்டுகளுக்கு என்னாச்சு?​

இந்த கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில், புழக்கத்தில் இருந்து ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக தகவல் ஏதும் இல்லை. ரிசர்வ் வங்கி தகவல்படி, 2017 மார்ச் இறுதியில் 9.512 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளும், 2022 மார்ச் இறுதியில் 27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளும் புழக்கத்தில் இருந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

​2000 ரூபாய் நோட்டுகளின் நிலை​

2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் நிரப்பக்கூடாது என வங்கிகளுக்கு எந்தவொரு உத்தரவும் வழங்கப்படவில்லை. வங்கிகள் தாமாகவே முடிவு செய்து ஏடிஎம்களில் தேவைக்கு ஏற்ப நோட்டுகளை நிரப்புகின்றன எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

​2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்​

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. 2019-20ஆம் நிதியாண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் வாயிலாக தெரிகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்