ஆப்நகரம்

கடனை அள்ளிக் கொடுக்கும் TMB வங்கி.. வருமானமும் அதிகம்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் வருவாய் மற்றும் செயல்பாட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 23 Jan 2023, 4:30 pm
Samayam Tamil TMB
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறை வங்கியாகும். இவ்வங்கி 511 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களைக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இவ்வங்கி 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக
லாபம் ஈட்டி வருகிறது.

இந்த வங்கி தனது செயல்பாடுகள் மற்றும் வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2022-23 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2022-23ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த 9 மாத கால நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

2022-23ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 5.69 % வளர்ச்சியடைந்து ரூ.78,242 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ. 43,440 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களின் மொத்தத்தொகை ரூ. 34,802 கோடி என்ற நிலையில் உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை (CASA) ரூ12,851 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. வங்கியானது விவசாயம், சிறு குறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

2022-23 மூன்றாம் காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.23,235 கோடியில் இருந்து ரூ.25,636 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 10.33% ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 79.67% என்ற விகிதத்தில் உள்ளது. விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.10,620 கோடியாக உள்ளது. விவசாயத் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு மொத்த கடன்களில் 18% சதவிகிதம் மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 30.52% கடன் வழங்கியுள்ளது.

CPS திட்டத்தை ஒழிக்க சென்னையில் மாபெரும் மாநாடு!
MSME துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.11,986 கோடியில் இருந்து ரூ.12,870 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 7.38% ஆக உள்ளது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இந்த காலாண்டில் இரண்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது, மேலும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 25 புதிய கிளைகளைத் துவங்க திட்டமிட்டுள்ளது. காப்பீடு திட்டங்களை வணிகப்படுத்த, மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், சோழா எம் எஸ் பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் கோடக் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பல புதிய டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு ஒப்பந்தக்களை நடப்பு நிதியாண்டில் எஞ்சியிருக்கும் காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்