ஆப்நகரம்

5000 ரூபாய் பென்சன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

மத்திய அரசின் இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்தால் மாதம் 5000 ரூபாய் வரையில் பென்சன் வாங்கலாம்.

Samayam Tamil 29 Mar 2022, 7:29 am
இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் கடைசிக் காலத்தில் உங்களது வாழ்க்கையை நெருக்கடி இல்லாமல் நடத்த பென்சன் போன்ற ஏதேனும் ஒரு நிதி ஆதாரம் உங்கள் கையில் இருந்தால் உதவியாக இருக்கும் அல்லவா? அதற்கு இப்போதே நீங்கள் தயாராக வேண்டும். அதற்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது.
Samayam Tamil pension


தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக அடல் பென்சன் யோஜனா என்ற பென்சன் திட்டத்தை மத்திய மோடி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் வரையில் பென்சன் வாங்கலாம். இத்திட்டம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பென்சன் தருகிறது.

உங்களது 60 வயதுக்கு பின்னர் ஓய்வுக் காலத்தில் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெற வேண்டுமெனில் நீங்கள் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயதிலேயே இணைய வேண்டும். அதிலிருந்து 60 வயது வரையில் மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். 40 வயது வரையிலான மக்கள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 5000 ரூபாயும் பென்சன் கிடைக்கும்.

பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் / மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் போகும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, உங்களது வங்கிக் கணக்கு உள்ள வங்கியிலேயே நீங்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் கிடைக்கின்றன.

இத்திட்டத்தில் இணைவதற்கு உங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் கட்டாயமாகும். அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்கு நீங்கள் பதிவுசெய்யும் வயதைப் பொறுத்து பங்களிக்க வேண்டிய தொகை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்