ஆப்நகரம்

திருமண சீசன் தொடங்கியதால் பூக்கள் விலை உயர்வு!

திருமண சீசன் தொடங்கியதால் பூக்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 1 Jun 2023, 5:08 pm
திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில் பூக்களின் விலையும் உயரத் தொடங்கிவிட்டது.
Samayam Tamil flower market
flower market


ஓசூர் மலர்சந்தையில் திருமண சீசனையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் தினமும் ஓசூர் மலர் சந்தைக்கு 300 டன் வரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சமீப நாட்களாக வெயில் தாக்கம் காரணமாக பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆனால் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் இல்லாததால் பூக்களுக்கு போதிய விலை இல்லாமல் விசாயிகள் கவலையடைந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக திருமணம் சீசன் தொடங்கியதால், ஓசூர் மலர் சந்தையில் பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் உயர்ந்தது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி 120 ரூபாய் வரைலும், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பன்னீர் ரோஜா 100 ரூபாய்க்கும், ஊசிமல்லி 300 ரூபாய்க்கும், குண்டுமல்லி 260 ரூபாயிலிருந்து 320 ரூபாய்க்கும் விற்பனையானது.

பட்டன் ரோஜா 80 ரூபாய்க்கும், சாமந்தி 60 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும் விற்பனையானது. அதே போல் திருமண மாலைகள் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்