ஆப்நகரம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது.. ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் எதிர்காலத்தில் கடும் சுமை ஏற்படும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 19 Jan 2023, 5:39 pm
பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மீண்டும் மாறுவதால் நிறைய பிரச்சினைகள் வரும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் தற்போதைய செலவுகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் எதிர்கால சுமையும் கடுமையாக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil former rbi governor raghuram rajan says implementing old pension scheme will bring huge liabilities in future
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது.. ரகுராம் ராஜன் எச்சரிக்கை!



பழைய ஓய்வூதிய திட்டம்

2003ஆம் ஆண்டு வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர், 2004ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த நிலையான ஓய்வூதியமும், சலுகைகளும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைப்பதில்லை எனவும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாநிலங்கள் பச்சைக் கொடி

அண்மையில் பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. இதையடுத்து தற்போது இமாசலப் பிரதேச அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

ரிசர்வ் வங்கி தற்போது மாநிலங்களின் நிதிநிலை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் எதிர்காலத்தில் கடும் சுமை ஏற்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

ரகுராம் ராஜன் சொல்வது என்ன?

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார அறிஞருமான ரகுராம் ராஜன் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அங்கே அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதால் தற்போதைய செலவுகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் கடும் சுமை ஏற்படும் என எச்சரித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தில் அதிக சுமை ஏற்படுவதாலேயே புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு என்ன சொல்கிறது?

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எந்த திட்டமும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் எதிர்காலத்தில் சுமை அதிகரிக்கும் என மத்திய அரசுக்கான பொருளாதார ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்