இந்நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்தால் பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொருட்கள் பெரும்பாலும் சாமானிய மக்கள் சார்ந்தவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா - உக்ரைன் பதற்றத்தால் எந்தெந்த பொருட்களின் விலை உயரலாம் என்பதை பார்ப்போம்.
பெட்ரோல் - டீசல்
உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியாவிலோ மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய்க்கு 25% பங்கு உள்ளது. உக்ரைன் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தொடும் நிலையில் உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஸ் சிலிண்டர்
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதற்கு ஏற்ப எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையிலும் தாக்கம் இருக்கும். எனவே எரிவாயு சிலிண்டர் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தால் பணவீக்கம் மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணெய்
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் மண்ணெண்ணெய் விலையிலும் எதிரொலி இருக்கும். எனவே, உக்ரைன் பதற்றத்தால் மண்ணெண்ணெய் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோதுமை
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நிறைய கோதுமையை கொள்முதல் செய்கிறது. உலகளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது. அதேபோல, உக்ரைன் நாடும் மிகப்பெரிய அளவில் கோதுமை ஏற்றுமதி செய்கிறது. இரு நாடுகளும் முட்டிக்கொண்டுள்ளதால் கோதுமை விலை உயர வாய்ப்புள்ளது.
உலோகங்கள்
உலகளவில் பல்லேடியம் (Palladium) ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு பல்லேடியம் பயன்படுகிறது. எனவே, பல்லேடியம் விலை உயர வாய்ப்புள்ளது. இதன் விளைவாக மொபைல் போன் விலையும் உயரலாம்.
தங்கம்
பதற்றமான சூழல்களில் தங்கத்தின் விலை இயல்பாகவே வேகமாக உயரும். எனவே, ரஷ்யா - உக்ரைன் பதற்றம் மேலும் அதிகரித்தால் தங்கத்தின் விலையும் உயரும்.