ஆப்நகரம்

இந்தியாவுக்குக் கேடு காலம்... சர்வதேச ஆய்வில் எச்சரிக்கை!

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும் என்று மூடீஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 8 May 2020, 7:14 pm
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மந்தமாகவே இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியைக் குறைத்துவிட்டதாகவும், போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் மத்திய அரசு இருந்த நிலையில், திடீரென உருவான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
Samayam Tamil corona


இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழில் நடவடிக்கைகளும் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் அது வளர்ச்சியை மீட்டெடுப்பதற்குப் போதுமானதாகத் தெரியவில்லை.

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா... சம்பளத்தைக் குறைத்த கோடாக் வங்கி!

இந்நிலையில், சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ் இன்வெஸ்டார்ஸ், 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. சரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க குறுகிய வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாகவும், இதனால் மந்தமான வளர்ச்சியே நீடிக்கும் எனவும் மூடீஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு வருவதால்தான் இந்தியப் பொருளாதாரம் பின்னோக்கிச் செல்வதாக மூடீஸ் நிறுவனம் கூறியுள்ளது.

உள்நாடு கைகொடுக்கவில்லை... ஏற்றுமதியை குறிவைக்கும் நிறுவனங்கள்!

அரசின் கடன் சுமை அதிகரித்து வருவது, உள்கட்டுமானத் துறையின் முடக்கநிலை, நிதித் துறையில் நெருக்கடி போன்ற காரணிகள் இந்தியாவை வளர விடாமல் தடுப்பதாக இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வளர்ச்சி இல்லாவிட்டாலும், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு முன்னேறிச் சென்றால் அடுத்த 2021-22 நிதியாண்டில் 6.6 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைவதற்கு வாய்ப்பு இருப்பதாக மூடீஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மூடீஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்த ஆண்டில் இந்தியா 0.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்