ஆப்நகரம்

மாதம் ரூ.36,000 பென்சன்: எல்ஐசியின் அற்புதமான திட்டம்!

உங்க வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பென்சன் கிடைக்கும்!

Samayam Tamil 11 Dec 2020, 10:37 am
எல்லோருக்குமே தங்களது கடைசிக் காலத்தில் எந்த நெருக்கடியும் இல்லாத சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான பென்சன் தொகை வர வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பை எல்ஐசி நிறுவனம் வழங்குகிறது. அத்திட்டம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
Samayam Tamil get 36000 rs pension every month with this lic plan
மாதம் ரூ.36,000 பென்சன்: எல்ஐசியின் அற்புதமான திட்டம்!


ஓய்வூதியம்!

இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். அதற்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ஜீவன் அக்‌ஷய் பாலிசி!

எல்ஐசி என்று அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த நிறுவனமாகும். நீங்கள் ஓய்வு பெறும் திட்டம் இருந்தாலோ அல்லது நிதி நெருக்கடி இல்லாத சுகமான வாழ்க்கை வாழ விரும்பினாலோ எல்ஐசி அதற்கு உதவுகிறது. ஓய்வுக் காலத்தில் சுகமான வாழ்க்கைக்காக எல்ஐசி செயல்படுத்தி வரும் திட்டம்தான் ஜீவன் அக்‌ஷய் பாலிசி திட்டம். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் மாதத்துக்கு 36,000 ரூபாய் பென்சன் பெற முடியும்.

வயது வரம்பு என்ன?

நீங்கள் இந்த பாலிசியை வாங்குவதற்குக் குறைந்தபட்சம் 35 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேபோல அதிகபட்சம் 85 வயது வரையில் இந்த பாலிசியை வாங்கலாம். இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தப் பாலிசியை வாங்கிப் பயன்பெறலாம். உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கூடுதல் சலுகை கிடைக்கிறது. நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இதில் கிடையாது.

எவ்வளவு பென்சன் கிடைக்கும்?

45 வயது நிரம்பிய ஒருவர் இந்த பாலிசியை வாங்குவதாக இருந்தால் அவர் உத்திரவாதப் பணமாக ரூ.70 லட்சம் பெறுவதாக இருந்தால் அவர் ஒரே பிரீமியம் தொகையாக ரூ.71,26,000 செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் வாங்க முடியும். அவருக்கு மாதத்துக்கு ரூ.36,429 என்ற அளவில் பென்சன் வந்துகொண்டிருக்கும். அதேபோல, மாதா மாதம் பென்சன் வாங்காமல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையே பென்சன் வாங்கிக் கொள்ளலாம். பென்சன் தாரரின் இறப்புக்குப் பிறகு இந்த பென்சன் திட்டம் மூடப்பட்டுவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்