ஆப்நகரம்

லோன் வாங்குனவங்களுக்கு குட் நியூஸ்!

கொரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு சலுகை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 17 Aug 2020, 5:54 pm
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்ததால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வழக்கமான ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமானது. இதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தீவிரம் குறையாத சூழலில் ஊரடங்கு காலமும் ஜூன் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈஎம்ஐ செலுத்துவதற்கான சலுகையும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
Samayam Tamil loan


இதன்படி, ஆகஸ்ட் 31 வரையில் ஈஎம்ஐ செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இந்த அறிவிப்புக்கு வங்கிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவணைக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டால் வங்கிகளின் சொத்து மேலாண்மை பாதிக்கப்படும் எனவும், வாடிக்கையாளர்களிடையே கடனைத் திருப்பிச் செலுத்தும் வழக்கத்தில் பின்னடைவு ஏற்படும் எனவும் வங்கிகள் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பிலிருந்தும் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்தும் கடன் சீரமைப்பு என்ற பெயரில் தேவையானோருக்கு ஈஎம்ஐ சலுகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

EMI சலுகை நீட்டிக்கப்படுமா? வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன?

அதன்படி, வீட்டுக் கடன் வாங்கியோருக்கு தவணைக் காலம் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா ஊரடங்கால் சம்பளம், வேலை இழந்தவர்கள் ஈஎம்ஐ தொகையை சில மாதங்களுக்குக் குறைவாகச் செலுத்தும் சலுகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து வங்கிகள் தரப்பிலிருந்து ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி சமயத்தில் வாடிக்கையாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் அவர்களது சொத்துகளை முடக்கவோ அல்லது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ விரும்பவில்லை என்று வங்கிகள் கூறுகின்றன.

மாதத் தவணை கட்ட சலுகை நீட்டிக்கப்படுமா?

இந்த விவகாரத்தில் வி.கே.காமத் தலைமையிலான குழு தனது பரிந்துரையை செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியிடம் வழங்கவுள்ளது. ரியல் எஸ்டேட், விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடன் மறு சீரமைப்பு நடவடிக்கை தொடர்பான முடிவுகள் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்