ஆப்நகரம்

போனஸ், பதவி உயர்வு எப்போது? காக்னிசண்ட் அறிவிப்பு!

சம்பள உயர்வு, பதவி உயர்வு, ஊக்கத் தொகை போன்ற சலுகைகள் வழங்கப்படும் என்று காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 6:49 pm
இந்திய ஐடி துறை கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கடியான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி, சந்தையில் போட்டி, தேவை குறைவு, பணிநீக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் கொரோனா ஊரடங்கால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள் நீடிப்பதால் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் நஷ்டத்தையும் சமாளிக்க, நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் பணிநீக்கத்தையும் சம்பளக் குறைப்பையும் மேற்கொண்டன. புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
Samayam Tamil it


இந்நிலையில், அடுத்த காலாண்டிலிருந்து பணியாளர்கள் நலனில் முக்கியத்துவம் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் நான்காவது காலாண்டு முதல் போனஸ், பதவி உயர்வு போன்ற சலுகைகள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் காக்னிசண்ட் நிறுவனத்தின் வருவாய் 4.2 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த ஆண்டில் வழங்கப்படும் போனஸ் தொகை போன்ற சலுகைகள் 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் என்று காக்னிசண்ட் நிறுவனம் கூறியுள்ளது.

வெளிநாட்டுப் பணம்: கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு!

முன்னதாக இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. அதைத் தொடர்ந்து தற்போது காக்னிசண்ட் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் காக்னிசண்ட் நிறுவனம் மொத்தம் 1,900 பேரை வேலையில் சேர்த்திருந்தது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்ஹ்ட பணியாளர்களின் எண்ணிக்கை 2,83,100 ஆக உயர்ந்தது. எனவே கொரோனா பாதிப்புகள் இருந்த சமயத்திலும் காக்னிசண்ட் நிறுவனம் வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தது. காக்னிசண்ட் நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பு ஐடி பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்