ஆப்நகரம்

வணிகர்களுக்கு சூப்பர் நியூஸ்... இனி கூகுளிடமே கடன் பெறலாம்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவுதற்காக கூகுள் நிறுவனம் பல்வேறு அமசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jun 2020, 8:10 pm
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வாட்டியெடுப்பதால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கொரோனாவால் உடல்நலப் பிரச்சினைகள் ஒரு பக்கம் இருக்க, பொருளாதார சிக்கல்கள் மறு பக்கம் பெரும் தலைவலியாக இருக்கின்றன.
Samayam Tamil கூகுள் பே


கொரோனா ஊரடங்கால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முழுமையாக முடங்கி தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் படிப்படியாக தொழில் செயல்பாடுகளை அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள சிறு, குறு நிறுவனங்கள் தங்களது தொழிலை மீட்டெடுத்து, மறுகட்டமைப்பு செய்வதற்காக கூகுள் இந்தியா நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ‘Grow with google small business' என்ற பிரத்யேக பிரிவையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்பிரிவு அனைத்து சிறு, குறு தொழில்களுக்கான மையமாக செயல்படும். தொழிலை நடத்துவதற்கு தேவையான டிஜிட்டல் கருவிகள், தயாரிப்புகளை இதன் மூலம் பயன்படுத்திகொள்ளலாம். மேலும், தொழிலுக்கு உதவக்கூடிய வீடியோக்கள், டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவி என அசத்தலான அம்சங்களை கூகுள் வழங்குகிறது.

தற்போது இந்தத் தளம் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தியிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், கூகுள் மை பிசினஸ் செயலியில் கூகுள் பே, கூகுள் மேப்ஸ் போன்ற அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் பே செயலியில் இனி அருகிலுள்ள வர்த்தகர்கள், கடைகளை கண்டறியலாம்.

இதன்மூலம் வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களை பெறுவது மட்டுமல்லாமல், தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு வசதிகள், கடையில் இருக்கும் பொருட்கள், கடை திறந்திருக்கும் நேரம் போன்ற விவரங்களையும் கூகுள் பே செயலியில் அறிவிக்கலாம். மேலும், கூகுள் பே செயலியில் வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்கான அம்சமும் அறிமுகமாகியுள்ளது. கடன் வழங்க கூட்டணி அமைப்பதற்காக நிதி நிறுவனங்களுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுபோக ப்ரோ வெர்ஷனில் வீடியோ கான்ஃபரன்சிங், கூகுள் மீட், கூகுள் ட்ரைவ், டாக்ஸ், ஷீட், ஸ்லைட்ஸ், ஜி-சூட் போன்ற அம்சங்களும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், இந்தியாவில் இதுவரை 10 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு டிஜிட்டல் திறன்களை பயிற்றுவித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்