ஆப்நகரம்

கூகுள் நிறுவனத்துக்கு 1337 கோடி அபராதம்.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்!

கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 1337 கோடி ரூபாய் அபராதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 5 Mar 2023, 3:13 pm
கூகுள் நிறுவனத்துக்கு (Google) 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அபராதத்துக்கு இடைக்கால தடை விதிக்க தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அபராத உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தை (Supreme court) அணுக கூகுள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil supreme court - google
supreme court - google


கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இருக்கும் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இதுகுறித்து இந்திய போட்டி ஆணையம் (CCI) விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனத்துக்கு 1337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டது.

இந்த அபராத உத்தரவை எதிர்த்து டிசம்பர் 20ஆம் தேதி தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் (NCLAT) கூகுள் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயமோ, கூகுள் நிறுவனம் மூன்று வாரங்களுக்குள் அபராதத்தில் 10% தொகையை மட்டும் முன்பே செலுத்தும்படி உத்தரவிட்டது.

மேலும், கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 1337.76 கோடி ரூபாய் அபராத உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. இறுதி விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இடைக்கால தடை விதிக்க வேண்டியதில்லை என தீர்ப்பாயம் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணையில் கோளாறுகள் இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய போட்டி ஆணையத்தின் சொந்த ஊழியர்களே கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், இந்த விசாரணையில் இருந்து இந்திய போட்டி ஆணையம் ஒதுங்கி இருக்க வேண்டும் எனவும் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் கூகுள் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுத் தாக்கல் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அபராதம் விதிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்திடம் கூகுள் மனுத் தாக்கல் செய்யப்போவதாக தெரிகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்