ஆப்நகரம்

ஏர் இந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு... தள்ளிப் போகும் விற்பனை!

ஏர் இந்தியா பங்கு விற்பனை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 29 Jun 2020, 4:27 pm
மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனம்தான் ஏர் இந்தியா. இந்நிறுவனத்துக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. இந்திய விமானச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியாலும், விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாலும் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா தவித்து வருகிறது. தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஏர் இந்தியா, சம்பளக் குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இதுபோன்ற சூழலில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
Samayam Tamil air india


முதலில் ஏர் இந்தியாவின் 76 சதவீதப் பங்குகளை மட்டும் தனியாருக்கு விற்பனை செய்வதற்கான அறிவிப்பு வெளியானபோது, அதன் பங்குகளை வாங்க எவரும் முன்வரவில்லை. பின்னர் வேறு வழியின்றி ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவுசெய்யப்பட்டது. ஏர் இந்தியாவை வாங்குபவர்கள் வேண்டுமென்றால் அதன் பிராண்ட் பெயரை மாற்றிக்கொள்ளலாம் உள்ளிட்ட சில சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்தது. ஜனவரி 27ஆம் தேதியில் ஏர் இந்தியா விற்பனைக்கான பணிகள் தொடங்கின.

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துட்டீங்களா... கொரோனா காலத்தில் நற்செய்தி!

இதுபோன்ற சூழலில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. கொரோனா பீதியால் ஏர் இந்தியாவின் பங்கு விற்பனைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 வரையில் வழங்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் இன்னும் குறையாத நிலையில், ஏர் இந்தியா விற்பனைக்கான கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 31 வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா மட்டுமல்லாமல், மற்றொரு பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் 53 சதவீதப் பங்குகளை விற்பனை செய்வதற்கான கால அவகாசமும் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்