ஆப்நகரம்

பங்குகளை விற்று நிதி திரட்டும் மத்திய அரசு! ரூ.22,000 கோடிக்கு திட்டம்!

ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் உள்ள தனது பங்குகளை விற்று ரூ.22,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 6 May 2020, 3:23 pm
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருப்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் முடங்கியுள்ளதால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, சுங்க வரி, கலால் வரி, இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வருவாய் இல்லாமல் போயுள்ளது. ஆனால் மறுபுறமோ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசின் செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பது முடியாத ஒன்றாகத் தெரிகிறது. இதுபோன்ற சூழலில் நிதி நிலையை மேம்படுத்த வேண்டிய இக்கட்டான சூழலில் மத்திய அரசு இருக்கிறது.
Samayam Tamil stake sale


இதனால் பங்கு விற்பனை போன்றவற்றில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கொரோனா சமயத்தில் வரிகளை உடனடியாக உயர்த்துவதும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் மற்ற மூலங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன்படி, வேகமாக விற்பனையாகவும் நுகர்பொருள் நிறுவனமான ஐடிசி மற்றும் தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் பேங்க் ஆகிய இரண்டிலும் அரசுக்குச் சொந்தமாக உள்ள முழுப் பங்குகளையும் விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் Specified Undertaking of the Unit Trust of India (SUUTI) அமைப்பு மேற்கூறிய இரண்டு நிறுவனங்களிலும் வைத்துள்ள பங்குகள் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளன.

தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

2020 மார்ச் 31 நிலவரப்படி, ஐடிசி நிறுவனத்தின் 7.94 சதவீதப் பங்குகளையும், ஆக்சிஸ் வங்கியின் 4.69 சதவீதப் பங்குகளையும் SUUTI நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. தற்போது ஆக்சிஸ் வங்கியின் பங்கு ஒன்றின் விலை ரூ.389.2 ஆகவும், ஐடிசி நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.173.9 ஆகவும் இருக்கிறது. இதன்படி, மத்திய அரசு தனது பங்குகளை விற்பனை செய்தால் ரூ.22,123 கோடி கிடைக்கும்.

பெட்ரோல் விலை: இந்த நேரத்துலயும் அடி மேல் அடியா?

இந்த ஆண்டில் பங்கு விற்பனை வாயிலாக ரூ.2.10 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை வாயிலாக ரூ.90,000 கோடி திரட்டப்படுகிறது. சென்ற 2019-20 நிதியாண்டில் பங்கு விற்பனை வாயிலாக ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. பின்னர் அந்த இலக்கு ரூ.65,000 கோடியாகக் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை வாயிலாக அதிக நிதி திரட்டப்படும் என்றாலும் இதற்கு எதிர்ப்புகளும் உள்ளன. கொரோனா போன்ற இக்கட்டான சமயத்தில் பங்கு விற்பனை வாயிலாக நிதி திரட்டும் முயற்சி அவசியமானதாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்