ஆப்நகரம்

கொரோனா: உணவுக் கழக ஊழியர்களுக்கு அரசின் காப்பீடு!

கொரோனாவால் பாதிக்கப்படும் இந்திய உணவுக் கழக தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 Apr 2020, 8:25 pm
கொரோனா பீதியால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கும் வகையில், மார்ச் 27ஆம் தேதியில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ள 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் போதிய உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் விநியோகித்து வருகிறது.
Samayam Tamil கொரோனா_ உணவுக் கழக ஊழியர்களுக்கு அரசின் காப்பீடு


கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் சூழலிலும் பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் உணவு விநியோகத்தில் ஈடுபட்டு வரும் இந்திய உணவுக் கழக ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆதரவாக அவர்களுக்கு காப்பீட்டு உதவியை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. ஊரடங்கு தடைக் காலத்தில் பணியாற்றும் உணவுக் கழக ஊழியர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.35 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.

வங்கிக் கடன் சலுகை: வாடிக்கையாளர்களே உஷார்!

இந்த அறிவிப்பின் மூலமாக சுமார் 1 லட்சம் பேர் வரையில் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்திய உணவுக் கழக அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இயற்கைப் பேரிடர், தீவிரவாதத் தாக்குதல், குண்டு வெடுப்பு உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டால் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு காப்பீடு உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கே இந்த நிலையா? வேலையை இழந்த 1.6 கோடிப் பேர்!

தற்போதைய அறிவிப்பின்படி, உணவுக் கழகத்தின் தினசரி ஊழியர்களுக்கு ரூ.15 லட்சமும், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மற்ற அதிகாரிகளுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலும் காப்பீடு கிடைக்கும். முன்னதாக சுகாதாரப் பணியாளர்களுக்கு மத்திய அரசு காப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்