ஆப்நகரம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை: மத்திய அரசு விளக்கம்!

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 16 Sep 2020, 9:01 pm
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. வேலைவாய்ப்புகள் இல்லாமல் போனது. புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு நடையைக் கட்டினர். எனினும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் அவர்களது நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகை வழங்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil migrant workers


இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பேசுகையில், கொரோனா தொற்று காலத்தில், நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காக இதற்கு முன் இல்லாத அளவுக்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகக் கூறினார். சுமார் ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா சமயத்தில் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனாவுல இருந்து வருது... ஆனா போக மாட்டேங்குது!

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களின் வரி நிதியிலிருந்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி வழங்க அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் உத்தரவிட்டது. தற்போது வரை, சுமார் 2 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 ஆயிரம் கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் நாடு முழுவதும் 20 கட்டுப்பாடு மையங்களை அமைத்து, 15,000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் காலியாகும் பிஎஃப் பணம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ரூ.182லிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டது. நடைபாதை வியாபாரிகள் தங்களது தொழிலை மீண்டும் தொடங்க பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் 50 லட்சம் நடைபாதை வியாபாரிகள் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் கடன் பெற்று தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க முடியும். சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பிரதமரின் ஏழைகள் நலன் வேலைவாய்ப்பு திட்டம் 116 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஊரக கட்டமைப்பு திட்டங்களில், புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்