ஆப்நகரம்

வீடு தேடி வரும் ரேஷன் கார்டு.. இனி பிரச்சினையே இல்லை!

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் இனி உங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும்!

Samayam Tamil 25 Jun 2022, 9:20 am
ரேஷன் அட்டைதாரர்கள் அங்கும் இங்கும் அலையும் சிரமத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இனி ரேஷன் கார்டு வீட்டிலேயே வந்து கொடுக்கப்படும்.
Samayam Tamil happy news to tamil nadu ration card holders soon ration cards will be delivery at doorstep
வீடு தேடி வரும் ரேஷன் கார்டு.. இனி பிரச்சினையே இல்லை!


ரேஷன் கார்டு!

ரேஷன் கார்டு என்பது அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு அடையாள அட்டையாகும். இதை வைத்து ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கலாம். மாநில அரசு சார்பாக உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இந்த உதவிகளை நீங்கள் பெறமுடியும்.

வீண் அலைச்சல்!

ரேஷன் கார்டில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதை முதன்முதலில் வாங்குவது மிகவும் சிரமம். ஏனெனில் விண்ணப்பிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அது கைக்கு வந்து சேர்வதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. சிலருக்கு பல மாதங்கள் ஆகியும் ரேஷன் கார்டு வராது. சிலர் தாலுகா அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கும். தாலுகா அலுவலகம் சென்றால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையிலேயே கொடுத்துவிட்டதாகக் கூறுவார்கள். இது நிறையப் பேருக்கு அலைச்சலையும் மன உளைச்சலையும் தருகிறது.

ரேஷன் கார்டே வேண்டாம்!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் பல நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டும் என்று நினைத்து சிலர், ரேஷன் கார்டுக்கே விண்ணப்பிப்பதில்லை. ரேஷன் கார்டை வைத்து ரேஷன் கடையில் மணிக் கணக்கில் வரிசையில் நின்று வாங்குவதே பலருக்கு பெரும் சிரமமாக இருக்கிறது. அதுவும் மூத்த குடிமக்களின் நிலை இன்னும் கவலைதரும் வகையில் உள்ளது. இதுபோன்ற சூழலில் ரேஷன் கார்டு வாங்குவதற்கு அவர்களால் எவ்வாறு அலைய முடியும்?

தமிழக அரசு நடவடிக்கை!

இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை, பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம், உணவு வழங்கல் துறை அனுமதி கேட்ட நிலையில், அதை பரிசீலித்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வீட்டுக்கே வரும் ரேஷன் கார்டு!

இனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது அது வாடிக்கையாளரின் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும். விண்ணப்ப படிவத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கான ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அச்சிடப்பட்ட பின்னர் போஸ்ட் மேன் மூலம் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும். இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

ரேஷன் கார்டை அஞ்சல் மூலமாகப் பெற விரும்புவோர், அஞ்சல் கட்டணமாக 25 ரூபாயை இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என, மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அங்கும் இங்கும் அலையும் சிரமத்தை விட இந்த 45 ரூபாய் கட்டணம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமமாக இருக்காது!

அடுத்த செய்தி

டிரெண்டிங்