ஆப்நகரம்

ஹிண்டன்பர்க் அடுத்த தாக்குதல்.. புதிய ரிப்போர்ட் வரப்போவதாக எச்சரிக்கை.. அதானிக்கு பின் யார்?

அதானி குழுமம் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்போவதாக எச்சரித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 23 Mar 2023, 11:18 am
விரைவில் புதிய ரிப்போர்ட் ஒன்று வெளியாக இருப்பதாகவும், இப்புதிய ரிப்போர்ட் மிகப்பெரிய விவகாரம் எனவும் ஹிண்டன்பர்க் ஆய்வு (Hindenburg Research) நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil hindenburg research
hindenburg research


அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி அதானி குழுமம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், அதானி குழுமம் பல்வேறு மோசடிகள், முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபின் அதானி குழுமம் கடுமையான நெருக்கடியை சந்தித்தது. அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்துவிட்டன. அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி சொத்து மதிப்பு பாதிக்கு மேல் குறைந்துவிட்டது.

அதானி கடன் பத்திரங்களின் மதிப்பும் சரிந்தது. பின்னர் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அதானி குழுமம் கடன்களை அடைத்து வருகிறது. மேலும், முதலீட்டாளர்களை கவர உலகம் முழுவதும் ஹாங் காங், சிங்கப்பூர், லண்டன், துபாய் போன்ற நிதி நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கத்தில் இருந்து அதானி குழுமம் இன்னும் முழுமையாக வெளியே வரவில்லை. இந்த சூழலில், ஹிண்டன்பர்க் நிறுவனம் மற்றொரு அறிக்கையை விரைவில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் ட்விட்டரில், “விரைவில் புதிய ஆய்வறிக்கை வெளியாக இருக்கிறது. இதுவும் மற்றொரு பெரிய விஷயம்தான்” என்று தெரிவித்துள்ளது.

எனினும், எந்த நிறுவனம் பற்றிய ஆய்வறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிடப்போகிறது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. அதானி குழுமம் பற்றி மற்றொரு அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிடப்போகிறதா அல்லது வேறு நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்போகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும், ஹிண்டன்பர்க் புதிய அறிக்கை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது கார்ப்பரேட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்