ஆப்நகரம்

ஒரு வங்கி எப்படி இயங்குகிறது? வங்கிகள் ஏன் திவாலாகின்றன?

வங்கிகள் எப்படி இயங்கி லாபம் சம்பாதிக்கின்றன? வங்கிகள் திவாலாவது ஏன்?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 13 Mar 2023, 12:22 pm
அமெரிக்காவில் வங்கி துறையில் கடந்த சில நாட்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த சிலிகான் வேலி வங்கி (Silicon Valley Bank) வெறும் 48 மணி நேரத்தில் திவாலாகி மூடப்பட்டது. பின்னர் நியூ யார்க்கை சேர்ந்த சிக்னேச்சர் வங்கியும் (Signature Bank) நேற்று மூடப்பட்டுள்ளது.
Samayam Tamil Bank
Bank


வரும் நாட்களில் பல்வேறு வங்கிகள் மூடப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வங்கி வாடிக்கையாளர்கள் வேகவேகமாக சென்று தங்கள் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். சரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு வங்கி எப்படி தொழில் செய்கிறது?

வங்கிகள் எப்படி இயங்குகின்றன?

வங்கிகளின் பிரதான வேலை டெபாசிட்டுகள் வாயிலாக பணத்தை திரட்டுவதுதான். பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், அறக்கட்டளைகள் என பல தரப்புகளிடம் இருந்தும் வங்கிகள் பணத்தை திரட்டுகின்றன.

இந்த பணத்தை பெற்று, பணம் தேவைப்படுவோருக்கு வழங்குவதே வங்கிகளின் தொழில். தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் என யாருக்கெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு வங்கிகள் பணத்தை கடனாக வழங்குகின்றன.

டெபாசிட்டர்களிடம் பெற்ற பணத்துக்கு வங்கிகள் ஒரு சிறு வட்டியை செலுத்துகின்றன. கடன் பெற்ற கடனாளிகளிடம் அதிக வட்டியை வசூலிக்கின்றன. டெபாசிட்டருக்கு வழங்கப்பட்ட வட்டிக்கும், கடனாளியிடம் பெறப்பட்ட வட்டிக்கும் இடையேயான வேறுபாடுதான் வங்கியின் வருமானம்.

உதாரணமாக, டெபாசிட்டருக்கு 3% வட்டி வழங்குவதாக வைத்துக்கொள்வோம். கடனாளிக்கு 9% வட்டி விதிப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது வங்கிக்கு கிடைக்கும் 6% தான் வங்கியின் வருமானம்.

வங்கியில் டெபாசிட்டர்கள் பணத்தை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் பணத்தை எடுத்துவிட மாட்டார்கள். இதனால் வங்கிகள் தங்களிடம் இருக்கும் டெபாசிட் தொகையை வெளியே தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடனாக வழங்குகிறது.

வங்கிகளிடம் கடன் வழங்க முடியாமல் மிகையாக இருக்கும் டெபாசிட்டுகளை எடுத்து அரசு பத்திரங்களை வாங்கி வைத்துக்கொள்கின்றன. இந்த பத்திரங்களில் இருந்து வட்டி வாயிலாக வருமானம் கிடைக்கின்றன.

வங்கி வழங்கும் கடன்களும், பத்திரங்களுமே அந்த வங்கியின் சொத்துகள். டெபாசிட்டர்களிடம் இருந்து வங்கி பெற்ற டெபாசிட்டுகள் அந்த வங்கிக்கான கடன்கள் ஆகும்.

இதற்கிடையே ஏதாவது ஒரு தனிநபரோ, தொழில் நிறுவனமோ கடனை சரியாக செலுத்தவில்லை எனில் அது வாராக் கடனாக (Non Performing Asset) கருதப்படும். இதை வங்கி தனது லாபம் மற்றும் மூலதனத்தில் இருந்து சரிகட்ட வேண்டும்.

இதற்காகத்தான் ஒரே நிறுவனத்துக்கோ, ஒரே நபருக்கோ வங்கிகள் அளவுக்கு மிஞ்சி கடன் வழங்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவே ரிசர்வ் வங்கி (RBI) போன்ற மத்திய வங்கிகள் செயல்படுகின்றன.

ஒரு வங்கி இந்த முறையில்தான் செயல்பட்டு வருமானம் ஈட்டுகிறது. இதில் பிரச்சினை ஏற்படும்போது நெருக்கடி விரிவடைந்தால் வங்கி திவாலாகிவிடுகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்