ஆப்நகரம்

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: கணக்கை ஆக்டிவேட் செய்வது எப்படி?

அபராதம் செலுத்த வேண்டுமா? எவ்வளவு அபராதம்?

Samayam Tamil 15 Dec 2020, 1:08 pm
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து பணம் போட முடியாமல் சேமிப்புக் கணக்கு முடங்கிவிட்டால் என்ன செய்வது? அதைத் திரும்ப புதுப்பிக்க முடியுமா? முடியும். அதற்கான எளிய வழிகள் இதோ...
Samayam Tamil how to restart sukanya samriddhi yojana account
செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: கணக்கை ஆக்டிவேட் செய்வது எப்படி?


செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ கணக்கு துவங்கலாம். இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது.

வட்டி லாபம் எவ்வளவு?

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டத்திலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம்.

டெபாசிட் எவ்வளவு?

செல்வ மகள் சேமிப்புக் கணக்கை துவக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. இதற்கு முன்னர் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் தொகை செலுத்த முடியும். காசோலை, வரையோலை (டிமாண்ட் டிராஃப்ட்) மூலமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வசதியும் உள்ளது.

பணம் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?

பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தில் தொடர்ந்து பணம் போட முடியாமல் போகலாம். நிதி நெருக்கடி காரணமாகவும் ஒரு சில மாதங்கள் பணம் செலுத்த முடியாமல் போகலாம். இத்திட்டத்தில் ஒரு வருடத்துக்கு குறைந்தது 250 ரூபாய் டெபாசிட் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாவிட்டால் அந்த சேமிப்புக் கணக்கு செயல்படாத கணக்காகக் கருதப்படும். இதுபோன்ற சூழலில் அந்தக் கணக்கு மூடப்பட்டுவிடும். ஆனாலும் அந்தக் கணக்கை மீண்டும் புதுப்பிக்க முடியும்.

ஆக்டிவேட் செய்வது எப்படி?

தபால் நிலையம் அல்லது வங்கி, எங்கு கணக்கு தொடங்கப்பட்டதோ அங்கு சென்று கணக்கை மீண்டும் திறப்பதற்கான படிவத்தை நிரப்ப வேண்டும். அதுவரையில் நிலுவையில் இருக்கும் பணத்தை முழுவதுமாகச் செலுத்த வேண்டும். ஒரு வருடத்துக்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் செலுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் இரண்டு வருடம் கழித்து கணக்கைப் புதுப்பிப்பதாக இருந்தால் 500 ரூபாய் செலுத்த வேண்டும். இதனுடன் அபராதமாக ரூ.50 வசூலிக்கப்படும். அதாவது ஒரு வருடத்துக்கு 50 ரூபாய் என்ற அளவில் வசூலிக்கப்படும். இதன் பின்னர் உங்களது சேமிப்புக் கணக்கு மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். நீங்கள் அதில் தொடர்ந்து பணம் போடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்