ஆப்நகரம்

இந்தியா - கனடா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!

வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த 6ஆவது இந்தியா-கனடா அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 May 2023, 3:42 pm
இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 6ஆவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கனடாவின் ஒட்டாவா நகரில் மே 8ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா சார்பில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கனடா சார்பில் வர்த்தக அமைச்சர் மேரி என்ஜி ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Samayam Tamil india canada



இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா-கனடா இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் பலமாக இருப்பதாகவும், ஆழமான நல்லுறவு மற்றும் பொருளாதார நட்புறவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் இந்த ஆண்டு நடத்தப்பட்டு வரும் பல்வேறு கூட்டங்களின் முக்கிய விவாதங்கள் குறித்து இதில் ஆலோசித்தனர். இதையடுத்து, இரு அமைச்சர்கள் சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து கனடா அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலம் மற்றும் உக்ரைன் போர் சூழலிலும் இருத்தரப்பு வர்த்தகம் மேம்பட்டு இருப்பதாகக் இரு அமைச்சர்களும் கூறியுள்ளனர். இந்தியா - கனடா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2022ஆம் ஆண்டு 12 பில்லியன் டாலரை எட்டியிருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 57 சதவீதம் அதிகம் ஆகும்.

இரு நாடுகளுக்கு இடையேயான முதலீட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருப்பதாகவும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதையும் இரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேளாண் பொருட்கள், ரசாயனம், பசுமைத் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, வாகனம், பசுமை எரிசக்தி, மின்னணுப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் கனிமங்கள் ஆகிய துறையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

வர்த்தகத்தில் தீர்வுகாண வேண்டிய விஷயங்களில் இருதரப்பிலும் தொடர்ச்சியான ஆலோசனைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இரு நாட்டு அமைச்சர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்துவதுடன், பொருளாதார ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா-கனடா இடையேயான விரிவான பொருளாதார நட்புறவு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இரு அமைச்சர்களும் மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும், இந்தியாவும், கனடாவும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன. இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்ளை 2020ன் அடிப்படையில் கனடா பல்கலைக்கழங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-கனடா இடையேயான விமானச் சேவையை நீட்டிப்பதற்கு இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்திருப்பது இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதுடன் வர்த்தக விமானங்களும் இயக்கப்படும் என்று இரு அமைச்சர்களும் கூறினர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்