ஆப்நகரம்

Fiscal Deficit: இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை உயர்வு.. வரவு, செலவு எவ்வளவு?

ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் நிதிப் பற்றாக்குறை 7.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 30 Nov 2022, 6:15 pm
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 7.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் மொத்த நிதிப் பற்றாக்குறை 16.61 லட்சம் கோடிரூபாய், அதாவது ஜிடிபியில் 6.4% ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Samayam Tamil cash
cash


கடந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான மாதங்களில் நிதிப் பற்றாக்குறை 6.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் வருவாய் சரிந்தது. இது மட்டுமல்லாமல், கொரோனா நிவாரணப் பணிகளுக்கான செலவும் அதிகரித்தது.

இதன் விளைவாக 2021ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 9.3% ஆக உயர்ந்துவிட்டது. கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் ஏராளமானோரின் வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதனால் நிறைய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டன.

இத்தகைய சூழலில், பொதுமக்கள் செலவுகளை குறைத்து சேமிப்புகளில் அதிக கவனம் செலுத்தினர். இதனால், சந்தையில் நுகர்வு குறைந்துவிட்டது. ஆடம்பரப் பொருட்களின் விற்பனை சரிந்தது. முதலீடுகளும் கணிசமாக குறைந்துவிட்டன. இதனால் நிதிப் பற்றாக்குறையும் உயர்ந்தது.

டிஜிட்டல் ரூபாயில் வட்டி பணம் கிடைக்குமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
எனினும், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஜிடிபியில் 6.4% நிதி பற்றாக்குறை இலக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிர்ணயித்தார்.

இந்த சூழலில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ஏப்ரல் - அக்டோபர் வரை 7.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை என்றால் என்ன?

ஒரு நிதியாண்டில் அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசின் வரி வரவுக்கும், செலவுகளுக்கும் இடையேயான இடைவெளிதான் நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது.

வரவு செலவு

கடந்த ஏப்ரல் - அக்டோபர் மாதஙளில் இந்திய அரசின் மொத்த வரவு 13.86 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதில் வரி வரவு மட்டும் 11.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வரி அல்லாத வருவாய் 1.79 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மறுபக்கம், அரசின் செலவுகளோ 21.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் செலவு 3.18 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதில் மூலதன செலவு (capital expenditure) 4.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்திய பொருளாதாரம்

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஜூலை - செப்டம்பர்) ஜிடிபி விவரமும் இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிடிபி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்